திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேகம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் நாளை திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளைய தினம் முருகன் தெய்வானைக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
சென்னை: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளைய தினம் முருகன் தெய்வானைக்கு திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி கிரிவலப்பாதையில் மகா தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 18ஆம் தேதிகொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்கார லீலைநேற்று இரவு நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.
திருவிழாவின் 11வது நாளான இன்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை 31ஆம் தேதி பகல் 11.50 மணிக்கு கோவிலுக்குள் முருக பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது.
முருகன் தெய்வானை திருக்கல்யாணம்
ஞானத்தின் வடிவான முருகப்பெருமான் கிரியாசக்தியை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தெய்வீக நிகழ்வே முருகன் தெய்வானை திருமணம். 'நான்முகன் வேதம் ஓத, சூரிய சந்திரர்கள் தீபங்கள் ஏந்தி நிற்க, சிவ சக்தியர் ஆசி வழங்க, இந்திரன் தெய்வானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, சுப்பிரமணியக் கடவுள் தெய்வானையைத் திருமணம் செய்துகொண்டார்' என்று முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் நடைபெற்ற திருமணம் பற்றி திருப்பரங்குன்றம் தலபுராணம் விவரிக்கிறது.
முருகனின் முதல்படை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் தெய்வானை உடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்தான். முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பங்குனி உத்திர விழாவில் 11ஆம் நாள் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வானை கல்யாணக் காட்சியைக் கண்டு மகிழலாம். இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார்.
திருக்கல்யாணம்
பங்குனி உத்திர திருவிழாவின் 11வது நாளான நாளைய தினம் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்திற்காக சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் புறப்பட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் எழுந்தருள்கிறார். மகனின் திருமணத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வருவதால் அன்றைய தினம் மாலை வரை கோவில் நடை அடைக்கப்படும்.
தேரோட்டத்திற்கு அழைப்பு
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 1ஆம் தேதி கிரிவலப்பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது விழா ஏற்பாடுகளைகோவில் நிர்வாகம் செய்து வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, வடிவேல்கரை விளாச்சேரி, தனக்கன்குளம், தோப்பூர், நிலையூர், கூத்தியார்குண்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று நாட்டாமை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வெற்றிலை, பாக்கு மற்றும் பங்குனிப் பெருவிழாவின் அழைப்பிதழை தாம்பூலத்தில் வைத்து பாரம்பரிய வழக்கப்படி அழைப்பு விடுத்தனர்.