திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் - பக்தர்கள் அரோகரா முழக்கம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்: மாசித்திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் மாசித்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
'தூங்காத விழிகள் நான்கு' திரைப்படம்.. 7 நாட்களில் 4 பாடல்கள் கொடுக்கிறேன்'..கவிஞர் வைரமுத்து ட்வீட்
செப்புக் கொடி மரத்திற்கு பல்வேறு அபிசேக பொருட்களால் அபிஷேகம், நடைபெற்றது. காலை 5.20மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
கொடியேற்றம் கோலாகலம்
கொடியேற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதிரை ஆதினம் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் அக்தார் கருத்தபாண்டி நாடார்,இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தாசில்தார் சுவாமிநாதன், கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரோகரா முழக்கம்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மாசித் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மாசித் திருவிழாவில் பக்தர்கள் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதால் ஏராளமானோர் கொடியேற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு வழிபட்டனர்.
உருகுசட்டசேவை
வரும் 11ஆம் திருவிழாவின் முக்கிய விழாவான 5ஆம் திருநாள் இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 7ஆம் திருநாளான 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி
மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 8ஆம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந் தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
தேரோட்டம், தெப்ப உற்சவம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசித்தேரோட்டம் 10ஆம் திருநாள் தேரோட்டம் 16ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11ஆம் திருநாளான 17ஆம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு சுவாமியும் அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.