அந்த சூரியன் மண்ணில் இறங்கி வந்தாரோ...திருமலை பிரம்மோற்சவத்தில் தக தகவென ஜொலித்த மலையப்பசுவாமி
சென்னை: அலைகடலென திரண்ட பக்தர்கள்.. காணும் இடமெங்கும் கோவிந்தா முழக்கம் என திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த சூரியனே வானத்தில் இருந்து இறங்கி இந்த பூமிக்கு வந்து விட்டாரோ என்று வியக்கும் அளவிற்கு சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்தார் மலையப்பசுவாமி.
ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமிக்கு சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.
பிரம்மோற்சவம் தொடங்கிய நாள் முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவத்தின் 5வது நாளான நேற்றிரவு முக்கிய வாகன சேவையான கருடசேவை உற்சவம் நடந்தது.

தங்க கருட வாகனம்
இந்த உற்சவத்தில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகத பச்சை கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும்.

மலையப்பசுவாமி நகைகள்
தூளசி மாலையுடன் மூல விக்ரக மூர்த்தியான ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி அணிந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க சங்கிலி, மகர கண்டி, லட்சுமி ஹாரம் போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி அணிந்து சேவை சாதித்தார். இந்த நகைகள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை ஆகும்.

சிறிய திருவடி அனுமன் வாகனம்
முதல்நாள் இரவு பெரிய திருவடி கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான நேற்று காலை சிறிய திருவடி என்று அழைக்கப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி மாட வீதியில் வலம் வந்தார். அவ்வேளையில் சுவாமி வேடமணிந்து ஏராளமான கலைஞர்கள் நடனமாடினர். இதைக் காண மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

தங்க ரத உற்சவம்
நேற்று மாலையில் 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாயார்களுடன் எழுந்தருளினார். ரதத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருப்பதி மாடவீதியில் இந்த ரத ஊர்வல வைபவம் நடைபெற்றது. லட்சக் கணக்கானோர் தங்கத் தேரில் உலா வந்த சுவாமியை காண திரண்டனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா' என்ற பக்தி முழக்கத்துடன் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்றிரவு கஜ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சூரிய பிரபை, சந்திரபிரபை வாகனம்
ஏழாம் நாளான இன்றைய தினம் சூரிய பிரபை வாகன சேவையை முன்னிட்டு சூரிய நாராயணர் அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சாமி வாகன மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் எழுந்தருள அவருக்கு தூப, தீப,நைவேத்தியம் நடத்தப்பட்டது. அதன் பிறகு சூரியனின் ஏழு கதிர்களை குறிப்பிடும் வகையில் ஏழு தங்க குதிரைகள் பொருத்தப்பட்டுள்ள சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டருளினார். இன்று இரவு மலையப்ப சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் காட்சி தருவார்.

திருத்தேர் உற்சவம்
எட்டாம் நாள் காலை நாளைய தினம் திருத்தேர் உற்சவம் நடைபெறும். திருத்தேரில் மலையப்ப சுவாமி உபய நாச்சியர்களுடன் எழுந்தருளுவார். எட்டாம் நாள் இரவு மலையப்பசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் ஸ்ரீமன் நாராயணன் குதிரையின் மீது எழுந்தருள்வார் குதிரை வாகனம் மாடவீதிகளில் வருகின்ற பொழுது ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி பாடப்படுவது சிறப்பு

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
ஒன்பதாம் நாள் காலையில் பிரமோற்சவ விழா நிறைவையொட்டி தீர்த்தவாரி எனப்படும் சக்கர ஸ்நானம் நடைபெறும். திருமலையில் ஆதி தெய்வமான ஸ்ரீ வராக பெருமாள்சன்னதி வாசலில் சுவாமி புஷ்கரணி கரையில் ஸ்ரீதேவி ஸ்ரீ தேவி பூதேவியுடன் மலையப்ப ஸ்வாமி காட்சி தருவார். வேத கோஷங்கள் முழங்க அலங்கார திருமஞ்சனம் நடைபெறும். சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜை முடிந்தவுடன் பட்டாச்சாரியார்கள் சக்கரத்தாழ்வாரை அணைத்துக் கொண்டு சுவாமி புஷ்கரணியில் மூழ்கி எழுவார்கள். ஒன்பதாம் நாள் இரவு மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவியோடு மேளதாள வாத்தியங்கள் முழங்க கொடிமரம் அருகில் எழுந்தருள்வார். அப்பொழுது விசேஷ பூஜைகள் செய்து கொடி இறக்கப்படும்

புஷ்ப யாகம்
பிரம்மோற்சவ விழா முடிந்த மறுநாள் அதாவது பத்தாம் நாள் மலையப்ப சுவாமி, ராமானுஜரின் உத்தரவுப்படி நந்தவனம் அமைத்து, புஷ்ப கைங்கர்யம் செய்த அனந்தாழ்வான் தோட்டத்திற்கு எழுந்தருள்வார். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். உற்சவர்களான ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு திருக்கல்யாண மண்டபத்தில் புஷ்பயாக நிகழ்ச்சிகள் நடைபெறும். டன் கணக்கில் மலர்கள் கொண்டு வரப்படும். ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி மற்றும் துளசி, தவனம் போன்ற 14 வகை புஷ்பங்களால் உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்படும்.இந்த யாகத்தோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.












Click it and Unblock the Notifications