தூத்துக்குடி பனிமயமாதா தேர்பவனி - லட்சக்கணக்கனோர் பரவச தரிசனம்
உலகப் பிரசித்திபெற்ற, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 436ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வீதிகளில் உலா வந்த அன்னையின் தேர்பவனியை பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 436ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வீதிகளில் உலா வந்த அன்னையின் தேர்பவனியை பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
பனிமயமாதா தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். 436வது ஆண்டாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. மீனவர்களால் ஏழு கடல்துறை அடைக்கலத்தாய் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற பனிமய அன்னை பேராலயத்தின் 436வது திருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாள்களாக நடைபெற்று வரும் இந்த விழா நாள்களில் வியாபாரிகள், படகுத் தொழிலாளர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலி நடைபெற்றது.
பல ஆலயங்களில் மறையுரை என்பது காலையில் மட்டும்தான் நடக்கும். உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், இந்தப் பனிமயமாதா அன்னை ஆலயம் மட்டும்தான். அதேபோல மற்ற ஆலயங்களில் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் மட்டும்தான் தினமும் எட்டு திருப்பலிகள் நடக்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், பர்தா அணிந்த முஸ்லிம் மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி ஜெபிப்பதுதான் கூடுதல் சிறப்பாகும்.
9ஆம் நாள் திருவிழாவான சனிக்கிழமையன்று ஆலய வளாகத்துக்குள் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்றது. 10ஆம் நாள் திருவிழா நாளான ஞாயிறன்று நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்றது. வீதிகளில் ஒரு ஓரங்களிலும் உள்ள வீடுகளின் வாசல்களில் மக்கள் சாம்பிராணி போட்டும், பூக்களை சப்பரத்தின் மீது தூவியும் பிரார்த்தனை செய்தனர். இன்று காலை கொடி இறக்க சிறப்பு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.