வைகையில் பெருகிய வெள்ளம்...கள்ளழகரை வரவேற்க தயாராகும் மதுரை - மக்கள் மனங்களில் மகிழ்ச்சி
மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை: தூங்கா நகரமான மதுரை நகரம் குலுங்க குலுங்க சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கள்ளழகர் வைகையில் இறங்க வரப்போகிறார். அவரை வரவேற்க வைகையில் பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சித்ரா பவுர்ணமி நாளில் வானத்தில் முழு நிலவு ஜொலிக்க அதிகாலை நேரத்தில் வைகை ஆற்றில் இறங்குவார் கள்ளழகர். இந்த ஆண்டு பெருமழை பெய்து வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் மதுரையை வந்தடைந்துள்ளது.
வைகையில் கரைபுரண்ட வெள்ளம் போல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கள்ளழகர் வருகிற 16ஆம் தேதி மதுரை வைகை ஆற்றில் தங்கப் பல்லக்கில் இறங்கி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த நிகழ்ச்சியை காண வரும் பக்தர்களுக்கு வைகை ஆற்றில் குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மீனாட்சி திருக்கல்யாணம்
உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த 5ந்தேதி முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முத்தாய்ப்பாக நாளை காலை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

கள்ளழகர் எதிர்சேவை
நாளைய தினம் அழகர் மலையில் இருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார். 15ஆம் தேதி எதிர்சேவை நடைபெறுகிறது. சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி கள்ளழகரை எதிர்கொண்டு அழைப்பார்கள் மதுரைவாசிகள். வருகிற 16ஆதேதி காலை 5.50 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுமார் 10லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்று அழகரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்பாடுகள் தீவிரம்
வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியின்போது ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கள்ளழகரை வரவேற்க தயாராகும் மதுரை
மதுரை ஏ.வி. மேம்பாலம் அருகே வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் பாதைகள் சரிசெய்யப்பட்டு அங்கு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஏராளமானோர் திரளும் வகையில் அந்தப்பகுதி சீரமைக்கப்படுகிறது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் மழை நீரும் ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதைப் பார்த்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் மங்கள வாத்தியம் இசைத்து மலர்தூவி வைகை தண்ணீரை பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

3000 காவலர்கள் பாதுகாப்பு
தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த நிகழ்ச்சியை காண வரும் பக்தர்களுக்கு வைகை ஆற்றில் குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணிக்காக சுமார் 3,000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வைகை ஆற்றுப் பகுதியில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications