வைகாசி வளர்பிறை அஷ்டமி : கால பைரவரை வழிபட கண் திருஷ்டி, நோய்கள் நீங்கும் தடைகள் விலகும்
வைகாசி வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும்.
சென்னை: வைகாசி மாதத்தில் வருகின்ற பைரவருக்குரிய அஷ்டமி தினங்கள் சிறப்பானவை. அனைத்தையும் தீயவற்றில் இருந்து காக்கும் கடவுள்களாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கின்றனர். அதில் மிக அதிகம் பேரால் வழிபடப்படும் தெய்வமாக இருப்பவர் சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவர் ஆவார். பைரவரை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள். அந்த வகையில் வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மங்களகரமான காரியங்கள் அனைத்தும் விரும்பி செய்யப்படும் ஒரு மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. இம்மாதத்தில் வரும் அனைத்து திதி தினங்களுமே மகத்துவம் வாய்ந்தவையாகும். அதிலும் இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு, சக்தி வழிபாடு செய்வதால் நாம் விரும்பிய காரியங்கள் நிச்சயமாக நிறைவேறும்.
வைகாசி வளர்பிறை அஷ்டமி அன்று ஸ்ரீ கால பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறந்ததாகும். வைகாசி வளர்பிறை அஷ்டமி தினத்தில் ஸ்ரீ கால பைரவரை வழிபடுவதால் சனி கிரக தோஷங்கள் நீங்கும்.
நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது. பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம்.
இன்று பைரவரை வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். அன்று பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கிறது. ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த கவலைகள் நீங்கும் பொருளாதார தடைகள் விலகும் வருமானம் அதிகரிக்கத் துவங்கும்.
இன்று காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள பைரவர் கோயிலுக்கு அல்லது சந்நிதிக்கு சென்று பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்களை சொல்லி பைரவரை தியானிப்பதும், வணங்குவது சிறப்பாகும்.
மேற்சொன்ன முறைப்படி வைகாசி வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும்.
பாத சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி நடக்கும் ராசியினருக்கு சனியினால் ஏற்படும் பாதகமான பலன்கள் குறைந்து நன்மைகள் உண்டாகும். உங்களையும், உங்கள் வீட்டையும் பிடித்திருக்கும் துஷ்டசக்திகள் நீங்கும். நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் ஒழியும். நீண்ட நாட்களாக இருக்கின்ற நோய்கள் நீங்க தொடங்கி ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி மனநிறைவு உண்டாகும். மேலும் கஷ்டங்கள் விலகும், பயங்கள் போகும்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பொருளாதாரத்தடை விலகவும் கொடிய நோய்கள் நீங்கவும் வளர்பிறை அஷ்டமியில் சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்டபைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெறுகிறது. அஷ்ட பைரவர், மகா பைரவர், ஸ்வர்ண
தன ஆகர்ஷண பைரவர் யாகம், கண் திருஷ்டி யாகம் ப்ரத்யங்கிரா யாகம், மகா சுதர்சன தன்வந்திரி யாகம், அபிஷேகம், புஷ்பாஞ்சலி, நெய் தீபம், மிளகு தீபம் வழிபாடு காலை மாலை இருவேளை வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.
கொரோனா எனும் கொடிய நோய்கள் அகலவும், பயங்கள் போகவும், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் நலம் பெறவும், நாட்டின் பொருளாதார தடை நீங்கவும் அஷ்ட லஷ்மிகளின் அருள் கிடைக்கவும் அஷ்ட பைரவர் யாகம் மகா கால பைரவர் யாகம் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகங்கள் காலை மற்றும் மாலை நடைபெறுகிறது. அரசு வழிகாட்டுதல் படி யாகங்கள் பூஜைகள் நடைபெறுவதால் பக்தர்கள் நேரடியாக யாகத்தில் பங்கேற்க அனுமதி இல்லை. மேலும் விவரங்களுக்கு 9443330203.