முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் : மீன்களாக மாறிய ரிஷி புத்திரர்களுக்கு விமோசனம் அளித்த முருகன்
தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும் முருக பெருமானின் பிறந்த நாள் வைகாசி விசாகம் என்ற பெயரில் விழாவாக கொண்டாடப்படுகிறது.வைகாசி விசாக தினம் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. தண
சென்னை: தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும். முருக பெருமானின் பிறந்த நாளை வைகாசி விசாகம் என்ற பெயரில் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா முக்கியமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவரின் புத்திரர்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது பற்றி வைகாசி விசாகம் நாளில் அறிந்து கொள்வோம்.
வைகாசி விசாகம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் வரும். முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், செல்வம், புகழ் அடைவார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று 25 மே 2021, செவ்வாய்க் கிழமை விசாகம் நட்சத்திரம் தொடங்கும் நேரம் - மே 25, காலை 7.06 மணி முதல் வைகாசி நட்சத்திர முடியும் நேரம் மே 26 விடிகாலை 4.11 மணி வரை உள்ளது. இரண்டு நாட்களும் முருகப்பெருமானை வணங்கலாம்.
தூய்மையாக ஓடும் ஆறுகளையும், சுத்தமான குளங்களையும் சீரழித்து தண்ணீர் பஞ்சத்தில் தடுமாறுகிறோம். தண்ணீரை சுத்தமாக பாதுகாத்தால் அந்த முருகப்பெருமானின் அருள் கிடைக்கும். தந்தை சொல் கேட்காமல் தண்ணீரை அசுத்தம் செய்த முனிவரின் குழந்தைகள் ஆறு பேர் மீன்களாக சாபம் பெற்ற கதையை இந்த வைகாசி விசாகம் நாளில் தெரிந்து கொள்வது அவசியம்.
வைகாசி விசாகம் புராண கதை
வைகாசி விசாகம் இன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருச்செந்தூரில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இதுவாகும்.
பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.
அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார்.
உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.
மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.
ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது.
சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் நாளில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
இந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை வைக்கின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பு இன்றி இந்த விழா நடைபெற்றது.