வைகாசி விசாகத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சண்முகருக்கு பாலபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த ஆண்டை போலவே வைகாசி விசாக திருவிழா இன்று உள்திருவிழாவாக நடக்கிறது. இதில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக மகா பாலாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை: வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சண்முகர் சன்னதியிலேயே வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தமிழ்கடவுள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத் திருநாள் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, மருதமலை உள்ளிட்ட ஆகிய முருகனின் ஆலயங்களில் பக்தர்கள் பங்கேற்பின்றி விழா நடைபெறுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒரு நாள் விசாக விழாவாகவும், மற்றொரு நாள் மொட்டையராசு உற்சவமாகவும் நடைபெறும். கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில்கள் மூடப்பட்டன.
அதனால் வரலாற்றிலேயே முதல்முறையாக இருப்பிடத்தைவிட்டு இடம்பெயராத நிலையில் சண்முகர் சன்னதியிலேயே வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த வேண்டும். வைகாசி விசாக தினத்தன்று சண்முகபெருமானுக்கு பாலாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டது. வைகாசி விசாகத்திருவிழாவான இன்று காலை 7 மணியளவில் சண்முகர் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி சண்முகப்பெருமானுக்கு மகா பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.