ஸ்ரீரங்கம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்
புரட்டாசி சனிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்ய முன்பதிவு அவசியம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். கூட்டம் அதிகம் கூடுவதை குறைக்கும் வகையில் www.srirangam.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் சுவாமி கோவிலும் ஒன்று. வைணவ தலங்களில் பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்றது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் கூட. ஆண்டுதோறும் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவரும் வருகை தருகின்றனர்.
இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்கள் அனைத்தும் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தனி மனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நவராத்திரி: ரங்கநாச்சியார் திருவடி சேவை தரிசனம் பார்க்க வாங்க
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மிகப்பெரிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு சில கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளான 19ஆம் தேதி, 26ஆம் தேதி, அக்டோபர் மாதம் 3ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதிகளில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்கு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றி தரிசனம் செய்ய ஏதுவாக, www.srirangam.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயம்.