Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த சிவ ஆலயங்களை தரிசித்தால் காசிக்கு போன புண்ணியம் நிச்சயம் கிடைக்கும்

காசிக்கு சமமான, காசி விஸ்வநாதரை தரிசித்தால் கிடைக்கும் அத்தனை புண்ணியமும் கிடைக்கச் செய்யும், சிவன் கோயில்கள் நம் தமிழகத்திலும் உண்டு.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் அனைவரும் நினைத்தாலும், அனைவராலும் அங்கு தரிசிக்க இயலாத ஒன்றாகும். அதற்குத் தடையாக இருப்பது தங்களின் நிதி வசதியும் ஒரு காரணமாகும். அதற்கு மாறாக காசிக்கு சமமான, காசி விஸ்வநாதரை தரிசித்தால் கிடைக்கும் அத்தனை புண்ணியமும் கிடைக்கச் செய்யும், சிவன் கோயில்கள் நம் தமிழகத்திலும் உண்டு. அதுவும் ஒன்றல்ல, ஏழு சிவன் கோயில்கள். இதில் ஆறு கோயில்கள் காவிரிக்கரையிலும், ஒன்று தொண்டை மண்டலத்திலும் உள்ளது.

இந்தியாவில் எத்தனையோ சிவன் கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் அனைத்துமே, சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில்களாகும். இதில் சைவ சமயக்குரவர்களால் பாடல் பெற்ற கோயில்கள் என்று 274 கோயில்களும், சிவபெருமான் திருவிளையாடல் புரிந்த தலங்கள் என்றும், அட்டவீரட்டான தலங்கள் என்றும், சப்த விடங்க தலங்கள் என்றும் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன.

இத்தனை சிவன் கோயில்கள் இருந்தாலும், இந்துக்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க நினைப்பது காசி விஸ்வநாதர் கோயில் தான். அதிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் தங்களின் இறுதிக்காலத்தை காசிக்கு சென்று இக்கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமானை தரிசித்து கங்கைக் கரையிலேயே தங்களின் இறுதி நாட்களை முடித்துக்கொள்ள ஆசைப்படுவதுண்டு. தமிழகத்திலும் காசிக்கு நிகரான ஆலயங்கள் உள்ளன.

காசிக்கு நிகரான ஆலயங்கள்

காசிக்கு நிகரான ஆலயங்கள்

"ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம் சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ ஷேத்திர ஸமான ஷட்" என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகமும் உண்டு. அதன்படி திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், மாயூரம், சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம், திருமுதுகுன்றம் என்ற இந்த ஏழு சிவன் கோயில்களும் காசிக்கு சமமான கோயில்களாகும். இந்த கோயில்களைப் பற்றிய தலவரலாற்றை, அங்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் அறிந்திருப்பதில்லை. அதற்காக ஆர்வமும் காட்டுவதில்லை. அவற்றைப் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

திருவெண்காடு

திருவெண்காடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது திருவெண்காடு சமயக்குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர் என நால்வராலும் தேவரப் பாடல் பெற்ற தலம். அதோடு நவகிரக ஸ்தலங்களில் புதன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் நம்முடைய 21 தலைமுறைக்கும் ஏற்பட்ட பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. திருவெண்காடு ருத்ரபாதத்தை யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசிக்கு போய் தரிசித்த பலனைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் உள்ள புதன் பகவானை தரிசித்தால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பந்து, திருமணம், செல்வச்செழிப்பு, கலைத்துறையில் உயர்வு என எட்டு வகையான அதிகாரங்கள் தேடிவரும்.

 திருவையாறு

திருவையாறு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும். காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மண் லிங்கம் ஆகையால் ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்குநோக்கி, ‘ஐயாறப்பா' என்று சொன்னால் ஏழுமுறை எதிரொலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்.
மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர், அம்மன் தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி, திருமால், அப்பர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், வள்ளலார், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சூரியபகவான், திருநாவுக்கரசர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,சுந்தரர்
ஆகியோர் பதிகம் பாடியுள்ளனர்.

திருவிடைமருதூர்

திருவிடைமருதூர்

மிக அழகான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் மூன்று மணிநேரமாவது ஆகும். இக்கோயிலில் உள்ள மாடங்களும், ஒவ்வொரு பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதாகும். நான்கு புறமும் நான்கு கோபுரங்களுடன் நுழைவுவாயில்கள் உள்ளன. இவ்வூரின் எந்தத் திசையில், எந்தத் தெருவில் நின்று பார்த்தாலும் இக்கோயிலின் ராஜகோபுரம் தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கருவறையில் உள்ளது சுயம்பு லிங்கம் என்பதால் அதிக சக்தி கொண்டதாக உள்ளது என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் தன்னுடைய இறுதிக்காலத்தில் இக்கோயிலில் தான் கழித்தார். பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபடவேண்டிய கோயிலாகும். இக்கோயிலுக்குள் நுழைந்தால் வேறு நுழைவுவாயில் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்பது ஐதீகமாகும்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

மாயூரம், மாயவரம் என்றும் அழைக்கப்படும் ஊரில் உள்ள மயூரநாதர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த சிவன் கோயிலாகும். இக்கோயிலின் கிழக்குக் கோபுரம் ஒன்பது நிலைகளுடனும், மற்ற மூன்று கோபுரங்களும் மொட்டைக் கோபுரங்களாக காட்சியளிக்கின்றன. அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட கோயில்கள் மயிலாப்பூர், மயிலாடுதுறை என இரண்டு தலங்கள் ஆகும். இக்கோயிலில் ஸ்ரீமயூரநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், அபயாம்பிகை மயில் வடிவிலும் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக கந்த சஷ்டி விழாவின் போது முருகன் அன்னை பார்வதியிடம் தான் வேல்வாங்குவது வழக்கம். ஆனால் இங்கு முருகன் தந்தை சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாகும். இத்தலத்தின் மற்றொரு சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் ஆகும். அந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்து இத்தல இறைவனை தரிசித்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம்.

திருச்சாய்க்காடு - சாயாவனம்

திருச்சாய்க்காடு - சாயாவனம்

நாகை மாவட்டத்தில் காவிரிக்கரையில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்பதாவது கோயில் சாயாவனம் என்னும் சாயாவனேஸ்வரர் கோயில் ஆகும். பழங்காலம் தொட்டே இந்திர விழா என்னும் பெயரில் சித்ரா பௌர்ணமி விழா 21 நாட்கள் நடைபெறும். சோழ மன்னன் கோச்செங்கண்ணன் தன்னுடைய நாட்டில் யானை புகாத வகையில், மாடக் கோயில் என்னும் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான். அதில் இக்கோயிலும் ஒன்றாகும். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனாருக்கு இறைவன் காட்சி கொடுத்த தலம் ஆகும். இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள முருகப் பெருமான் கையில் வில்லேந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ருசம்ஹார மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருவாஞ்சியம்

திருவாஞ்சியம்

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என மூவரால் தேவரப் பாடல் பெற்ற, ஸ்ரீவாஞ்சியம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் இறைவன் ஸ்ரீவாஞ்சிநாதர் அம்பாள் ஸ்ரீமங்களநாயகியுடன் காட்சியளிக்கிறார். ஸ்ரீமஹாலட்சுமி ஸ்ரீமஹாவிஷ்ணுவை அடைய வேண்டி இங்கு வந்து சிவபூஜை செய்து விருப்பம் நிறைவேறியதால் திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. காசிக்கு ஒப்பாக கருதப்படும் காவிரிக்கரையில் உள்ள ஆறு சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். நவதீர்த்தங்களைக் கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள குப்த கங்கையில் நீராடி ஸ்ரீவாஞ்சிநாதரையும், எமதர்மனையும் வழிபட்டால் சகல நோய்களும் நீங்கி நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார்.

திருமுதுகுன்றம் - விருத்தாசலம்

திருமுதுகுன்றம் - விருத்தாசலம்

சுமார் மூன்றரை லட்சம் ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட திருமுதுகுன்றம் என்னும் விருத்தகிரீஸ்வரர் கோயில் தொண்டை மண்டலத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 22 தலங்களில் 9ஆவது கோயில் ஆகும். இக்கோயிலில் இறைவன் விருத்தகிரீஸ்வரர் என்ற பழமலைநாதர், இறைவி விருத்தாம்பிகை என்ற பெரியநாயகி. இக்கோயிலை ஆகமக் கோயில் என்றும் அழைப்பதுண்டு. இங்குள்ள தல விருட்சமான வன்னி மரம் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். பிரளய காலத்திலும் அழியாத கோயில் என்ற சிறப்பைப் பெற்றது. 28 சிவ ஆகமங்களுக்கும் 28 லிங்கங்களை முருகப்பெருமானே நிலை நிறுத்தியதாக கருதப்படும் ஒரே சிவாலயம் இதுவாகும். சிவபெருமானின் பஞ்சாட்ஷரமான ஐந்தெழுத்து மந்திரத்தின் படி இக்கோயிலில் உள்ள அனைத்துமே ஐந்து ஐந்தாக இருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். பழங்காலத்தில் இக்கோயில் இறைவனை தரிசிப்போர் காசிக்கு செல்வதில்லை என்ற பழக்கம் இருந்தது. அதனால் இக்கோயிலின் வடக்கு கோபுரத்திற்கு அருகிலுள்ள மணிமுத்தாறில் புண்ணியமேடு என்ற இடத்தில் இறந்தவர்களின் எலும்புகளை இட்டு ஆற்றில் மூழ்குவது வழக்கமாக இருந்து வருகிறது.காசிக்கு போக முடியவில்லையே என்று கவலைப்படுபவர்கள் இந்த ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று வந்தாலும் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+