கோவை உலகத் தமிழ் மாநாட்டை வரவேற்போம்
கோவையில் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தும் விருப்பத்தைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் அறிவித்த அறிவிப்பால்(17.09.2009) உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களும் தமிழ் ஆய்வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டைச் சென்னையில் நடத்திய பெருமைக்கு உரியவர்கள். அவரின் நூற்றாண்டு நிறைவுவிழா நடைபெற்ற நாளையொட்டி(15.09.2009) இத்தகு அறிவிப்பு வெளிவந்துள்ளமையால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமிழக முதலமைச்சரைப் பாராட்டியவண்ணம் உள்ளனர்.
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்மாநாட்டில் பல்வேறு ஆய்வரங்குகள் நடைபெற வாய்ப்புள்ளது. அப்பொழுது கணிப்பொறி,இணையம் சார்ந்த அரங்குக்கு முதன்மையளித்து ஆய்வரங்குகள் அமைக்கப் பெற வேண்டும். இணையத்தில் தமிழ் வளர்ந்துள்ள போக்கு, இன்னும் செல்ல வேண்டிய தூரம் யாவும் அறிஞர்களால் விவாதிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெறாதத் தமிழ் இணைய மாநாட்டுக் குறையை இந்த அரங்கு நிறைவு செய்வதாக இருக்கும்.
தமிழுக்கு வாய்ப்பான நேரம் இது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில்தான் தமிழ் விசைப்பலகை 99 அறிமுகம் செய்யப்பட்டது, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
எனவே உலகெங்கும் பரவி வாழும் இணையத் தமிழறிஞர்கள், கணினித்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சிக்கு உரிய ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க இந்த மாநாட்டடைப் பயன்படுத்திக்கொள்வோம்.
கொங்கு மண்டலத்தில் தமிழ் வளர்ச்சிக்குரிய பல பணிகள் நடைபெற்றுள்ளன.சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் முதல் தெய்வசிகாமணி கவுண்டர் ஐயா உள்ளிட்டவர்கள் உலவிய மண் இஃது.மன வளமும், பணவளமும், இடவசதிகளும் நிறைந்த பகுதி. வானூர்தி, தொடர்வண்டி,பேருந்து உள்ளிட்ட போக்கு வரவு ஏந்துகள் உடைய மாநகரம்.
அருகில் உதகை, பொள்ளாச்சி உள்ளிட்ட எழில் கொழிக்கும் பகுதிகள் உண்டு. உலகத் தமிழ் அறிஞர்களை வரவேற்கத் தகுந்த ஊரைத் தேர்வு செய்தமைக்கு முத்தமிழறிஞரைத் தினமணி பாராட்டியுள்ளது பொருத்தமேயாகும்.
நன்றி - http://muelangovan.blogspot.com