உலக அகிம்சை தினம்
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007ல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை தினமாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும், ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களையும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.
வன்முறையாலும், போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார்.
இவரின் நடைமுறைகளால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர்.
'அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல, வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர்வு செய்வார்கள் வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை; எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை" என்று காந்திஜி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதொரு கருத்தே.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கமைய முதலாவது அகிம்சை தினம் 2007 அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது 'சகிப்புத்தன்மை இன்மையாலும், மோதல்களாலும் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், எண்ணற்ற மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திர இந்தியா பிறப்பதற்குக் காரணமான மாகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை மீண்டும் நாம் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்திருந்தார்.
அந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ''அதிகரித்துவரும், கலாசாரக் கலப்பால் ஏற்படும் பதற்றத்தையும், சகிப்புத்தன்மை இன்மையால் ஏற்படும் மோதல்களையும் உலகம் உணர்ந்து வருகிறது. இதனால் தீவிரவாதத்தின் ஆதிக்கமும், வன்முறையைத் தூண்டும் கருத்துக்களும் பலமடைந்து வருகின்றன. மியான்மரில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைத் தாக்குதல்களைக் குறிப்பிட்ட அவர்: மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி அகிம்சை முறையில் ஆயுதங்களைத் தொடாமல் போராடுபவர்களின் மீது ஆயுதப் படைகள் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் குடியுரிமைகளுக்காக மிகப்பெரிய இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் மகாத்மா காந்தி. அவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்வில் அகிம்சையைப் பின்பற்றினார், அதன் மூலம் எண்ணிலடங்கா மனிதர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தார்.'' என்றார்.
அக்கால கட்டத்தில் காந்திஜியின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிலும் கூட பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனினும் கடைசிவரை தனது கொள்கையிலிருந்து அவர் விலகவேயில்லை. அவரின் மன அழுத்தத்தினால் அகிம்சை முறையில், எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்ய முடியும் என்பதை உணர்த்தினார்.
இன்றைய சூழலிலும் காந்திஜியின் அகிம்சை கொள்கைகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதால், காந்தியக் கொள்கைகளை பின்பற்றி அகிம்சை கல்வியை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
மோகன்தாஸ் காந்தி 2, அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இத்தம்பதியினர் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.