நடுவுல நிறைய பேரை காணாம்!

இந்தப் படத்தைப் பற்றி எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. காரணம், இடையிடையே நான் கொஞ்சம் தூங்கிவிட்டேன்.
கோல்டன் குளோப் விருதுகளை வென்ற படமாச்சே, ஆஸ்கர் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதே என்று ரொம்ப நம்பிக்கையோடு இந்தப் படத்துக்குப் போனேன்.
எவ்ளவு மொக்கையான படமானாலும் அதை உட்கார்ந்து பார்த்துவிடும் திட மனது உடையவன் நான். இல்லாவிட்டால், ராமராஜன் நடித்த கோபுரதீபம் மாதிரியான படத்தையெல்லாம் பார்த்திருப்பேனோ..
அதே போல ''அம்மா நீ சாப்டுட்டு தூங்கு, நான் போய் திருடன புடிச்சுட்டு வந்துர்றேன்'' என்று ராமராஜன் போலீஸ் உடையில் தனது அம்மா கே.ஆர்.விஜயாவிடம் சொல்லிவிட்டுப் போவாரே ஒரு படத்தில், அந்தப் படத்தைக் கூட பார்த்திருக்கிறேன்.
ஆனால், நேற்று லெஸ் மிஸரபிள் படத்துக்கு நான் போனதற்கு முக்கியக் காரணம் ஆஸ்கர் மட்டுமல்ல.. அதில் எனக்கு மிகப் பிடித்த ரஸ்ஸல் குரோவ், ஹூக் ஜேக்மேன், அன்னா ஹாத்வே போன்றவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்களே என்பதும் மிக முக்கியக் காரணம்.
படம் நல்லாத்தான் ஆரம்பிச்சுச்சு.. பெரும் அலைகள் மோதும் ஒரு சமுத்திரத்தின் கரையில் சிறைக் கைதிகளை அடிமைகளாக பயன்படுத்தி ஒரு பெரிய கப்பலை கயிறுகளால் தரைக்கு இழுக்கும் காட்சியைப் பார்த்தவுடன் அட.. என்று தோன்றியது.
அதிலும், அந்தக் கைதிகள் தங்களது வலியை மறக்க ஒரு பாடலை ஹம் செய்து கொண்டே இழுக்க, அதில் முக்கியமான கைதியாக ஹூக் ஜாக்மேன் (இந்தப் படத்துக்கு ஒப்பனைக்காக ஆஸ்கர் தரலாம்.. ஜாக்மேனை இந்தக் காட்சியில் அப்படி மாற்றியிருந்தார்கள்) நின்றிருக்க, இவர்கள் ஒழுங்காக வேலை பார்க்கிறார்களா என்பதை மேலே இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஸ்ஸல் குரோவ் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
சரி, வலி மறக்கத் தான் பாட்டு பாடுகிறார்கள் என்று நினைத்திருந்தால், அடுத்த காட்சியில் ரஸ்ஸல் குரோவ் இந்தக் கைதிகளைப் பார்த்து பாட்டுப் பாட.. பதிலுக்கு அவர்களும் கோரஸாக பாட, அப்புறம் தான் தெரிந்தது இந்தப் படமே முழுக்க முழுக்க பாடல்களால் 'ஓபரா' ஸ்டைலில் எடுக்கப்பட்டது என்று.
படத்தில் யாருமே வசனம் பேசவே இல்லை. எல்லாமே வசன பாடல்கள் தான். நீ..... எங்கே... போறே.... என்று குரோவ் கேட்டால், நான்... ஊருக்குப் போகப் போறேன்... என்று ஒரு பதில் பாடல் பாடுகிறார் ஜாக்மேன்.
சுமார் 2.30 மணி நேரம் வசன பாடல்களை கேட்கும் பொறுமை உள்ளவர்கள் தவிர வேறு யாரும் இந்தப் படத்துக்குப் போவது வேஸ்ட். எனக்கு இடையே சாப்பிட்ட பாப்கார்ன் , குடித்த பெப்சி மட்டுமே பெரிய ஆறுதலாக இருந்தது. அதே போல படம் ஓடிக் கொண்டிருந்தபோது யாராவது செல்போனில் கூப்பிட மாட்டார்களா என்று மனம் ஏங்கியது. ஆனால், பாவிகள்.. யாருமே ஒரு மிஸ்ட் கால் கூட கொடுக்கவில்லை.
இடைவேளைக்குப் பின் எனது வரிசையில் அமர்ந்திருந்த பாதி பேரைக் காணோம்... தப்பி ஓடிவிட்டனர். நான் ஒரு optimist.. இதனால் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் நம்மை மீண்டும் திகைக்க வைப்பார்கள்.. என்ற நம்பிக்கையோடு முழுப் படமும் உட்கார்ந்தே இருந்தேன். ஆனால், திகைக்க வைக்கவில்லை.. திக் பிரமையில் தான் ஆழ்த்தினார்கள்.
ஒரு கைதி, பரோலில் வெளியே வந்து தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பிரான்ஸ் நாட்டின் ஒரு நகரின் மேயராகிவிடுகிறான். அவனைத் தேடிக் கொண்டு அலையும் இன்ஸ்பெக்டர் அதே ஊருக்கு மாற்றலாகி வந்துவிடுகிறார். அவரிடமிருந்து மேயரே தப்பியோடும் கதை.. இடையிடையே.. விபச்சாரக் கூட்டத்தில் தள்ளப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயல்வது, அந்தப் பெண் இறந்ததும் அவரது மகளை வளர்ப்பது, போலீசிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டே இருப்பது, வளர்ப்பு மகள் பிரஞ்சுப் புரட்சியில் ஈடுபட்டிருக்கும் வாலிபனைக் காதலிக்க, அதை எதிர்ப்பது, பின்னர் சேர்த்து வைக்க முயல்வது.. என்று போகிறது கதை.
படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் யாராவது பாடாமல் இருந்தால் மனத்துக்குள் அவ்வளவு ஆராவாரம் பரவுகிறது. யாராவது ஒரு வார்த்தை வசனம் பேசினால், அவருக்கு ஆஸ்கர் விருதை தந்துவிடலாமா என்று ஆர்வம் வருகிறது. அந்த அளவுக்கு படம் முழுக்க பாட்டுயா.. தாங்க முடியலை.
உனக்கு அறிவு அவ்வளவு தான், ஞானசூனியம்.. உனக்கு இந்த மாதிரியான புது முயற்சிகள், கலைப் படைப்புகளை உணரும் சக்தியோ அறிவோ இல்லை என்று என்னை யாராவது திட்டினால், நீங்கள் வாழ்க!. போய் உடனே இந்தப் படத்தைப் பார்க்கவும்..












Click it and Unblock the Notifications