ரஜினியின் 'நண்பேன்டா' ராஜ் பகதூருடன் ஒரு சந்திப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர். தனது தோழன் ரஜினி மாதிரி செம சிம்பிள். ''உன் நண்பனைக் காட்டு, உன்னைச் சொல்கிறேன்'' என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம். பெங்களூரில் அவருடன் சிறிது நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேச்செல்லாம் ரஜினி பற்றித் தான்.
ரஜினியை எப்போ முதல்ல சந்திச்சீங்க...?
1970ம் வருடம் தான் என் ரஜினியை முதன் முதலில் சந்தித்தேன். இருவருமே ஒரே நாளில் பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தோம். அவர் கண்டக்டர், நான் டிரைவர். இருவருக்கும் ஒரே ரூட்டில் முதன் முதலில் வேலை தந்தார்கள்.
10ஏ பஸ் ரூட்:
அது 10ஏ பஸ் ரூட். ஸ்ரீநகரில் இருந்து மெஜஸ்டிக் பஸ் நிலையம் செல்லும் பேருந்து அது. அது தான் எங்களது முதல் பரிச்சயம். முதல் நாளிலேயே இருவரும் நெருங்கிவிட்டோம். அவர் டிக்கெட் கொடுக்கும் ஸ்டைலையும், பாக்கி சில்லறையை கொடுக்கும் ஸ்டைலையும் பார்த்து முதல் நாளே அசந்துவிட்டேன்.
எதிலும் வேகம், வேகம், பரபரப்பு...
ரஜினி ஸ்டைல் எல்லாம் செய்வது இல்லை. அவர் இயல்பிலேயே அப்படித்தான். எதிலும் வேகம், வேகம், பரபரப்பு.. அது தான் நான் முதலில் பார்த்த ரஜினி. இப்போதும் அப்படித் தான்.
ரஜினிக்கு நடிக்க ஆசை வந்தது எப்படி?
ரஜினிக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். போக்குவரத்து ஊழியர்களான நாங்கள் சின்ன சின்ன டிராமா எல்லாம் போடுவோம். கெம்ப கெளடா பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ஹிரநயா, கலாஷேத்ரா, மித்ரமண்டலி போன்ற அரங்குகளில் இந்த நாடகங்கள் அரங்கேறும். அதில் பெரிய அளவில் பணம் எல்லாம் பார்க்க முடியாது. நடிப்பில் ஆர்வம் இருந்தவர்கள் அவர்களாகவே விரும்பி நடிப்பது தான். அதில் ரஜினி தான் முக்கிய வேடங்களில் நடிப்பார். நான் ஏதாவது சிறிய வேடங்கள் தான் செய்வேன்.
நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கவே ரஜினி விரும்புவார்:
அந்த நாடகங்களில் நடித்தபோது தான் ரஜினியை நான் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். குருஷேத்திரம் நாடகத்தில் துரியோதனன் வேடம் போட்டார் ரஜினி. சதாரா நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். மிக கஷ்டமான நெகட்டிவ் கேரக்டர்களை எடுத்துக் கொண்டு அதில் தான் நடிக்க விரும்புவார் ரஜினி.
யாருக்கும் கிடைக்காத வரவேற்பு:
அந்த நாடகங்களில் நடித்தபோது யாருக்கும் கிடைக்காத வரவேற்பு ரஜினிக்குக் கிடைக்க ஆரம்பித்தது. அவர் மேடைக்கு வந்தாலே விசில் பறக்க ஆரம்பித்தது. அவரது நடிப்புக்கு மிக பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தன. இதை ரஜினியே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. யாருக்கும் கிடைக்காத வரவேற்பு ஏன் ரஜினிக்குக் கிடைக்கிறது.. அவரிடம் ஏதோ இருக்கிறது.. என்று அவர் மேடையில் நடிக்கையில் கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன்.
தனி ஸ்டைல்:
அப்போது தான் அவரது நடிப்பில் தனி ஸ்டைல் இருப்பதை நானே உணர்ந்தேன். யாரை மாதிரியும் இல்லாமல் தனித்துவம் காட்டி ரஜினி நடிப்பதை பார்த்து ஆச்சரியம் அடைய ஆரம்பித்தேன்.
மெட்ராஸ் பிலிம் இன்ஸ்ட்டியூட்டுக்குப் போ:
இதை ரஜினியிடம் சொன்னால் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ரஜினி என்ற மனிதனுக்குள் ஒரு மாபெரும் நடிகன் ஒளிந்திருப்பதை நான் அடையாளம் கண்டேன். இதை திரும்பத் திரும்ப ரஜினியிடம் சொல்லி, சொல்லி, நீ மெட்ராஸ் பிலிம் இன்ஸ்ட்டியூட்டுக்குப் போ. நடிப்பில் பயிற்சி எடு.. அங்கே பெரிய பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம் வருவார்கள். உன் நடிப்பைப் பார்த்தால் உன்னை கொத்திக் கொண்டு போவார்கள் என்றேன்.
மிகுந்த தயக்கத்துக்குப் பின் மெட்ராஸ் கிளம்பினான்:
மிகுந்த தயக்கத்துக்குப் பின் மெட்ராஸ் கிளம்பினான் என் நண்பன். வேலைக்கு மெடிக்கல் லீவு போட்டுவிட்டு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்தார். 15 நாள், 30 நாட்களுக்கு ஒருமுறை கண்டக்டர் டூட்டிக்கு வந்துவிட்டு திரும்பவும் மெட்ராஸ் ஓடுவார் ரஜினி. இரண்டு வருடம் அங்கே படித்தார்.