என்னாது கற்பூரத்தை நுகர்ந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்குமா?.. பொய் நம்பாதீர்கள்!
டெல்லி: கற்பூரத்தை நுகர்ந்தால் நுரையீரல் நோய்களிலிருந்து விடுபடுவதோடு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவையும் அதிகரிக்கலாம் என சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. கற்பூரத்தை நுகர்வது ஆபத்தை கொடுக்குமே தவிர நுரையீரல் பிரச்சினைகளுக்கு தீர்வை தராது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் ஆங்காங்கே பல்கி பெருகி வரும் நிலையில் ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன் என்ற பழமொழிக்கு ஏற்ப பலர் தற்போது கை வைத்தியங்களை சொல்லி மக்களை குழப்பி இன்னலுக்குள்ளாக்கி வருகிறார்கள்.
கற்பூரம், லவங்கம், ஓமம், நீலகிரி தைலம் ஆகியவற்றை மூட்டை கட்டி நுகர்ந்து கொண்டே இருந்தால் நுரையீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் என சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
மேற்கண்ட பொருட்களை பொட்டலங்களாக கட்டி லடாக்கில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இது தவறான தகவல். தவறான செயல் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கற்பூரத்தை நுகர்வது என்பது ஆபத்தான காரியமாகும். சில நேரங்களில் உயிருக்கே உலை வைக்கும் சம்பவங்களையும் கற்பூரம் ஏற்படுத்தும். அதை சில வியாதிகளுக்கு மேல் பூச்சாக போட வேண்டுமே தவிர நுகர்வதோ உள்ளுக்குள் எடுத்துக் கொள்வதோ தவறானது. இதை யாரும் செய்யாதீர்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Fact Check
வெளியான செய்தி
கற்பூரம், லவங்கம், ஓமம் ஆகியவற்றை நுகர்ந்தால் நுரையீரல் நோய்களிலிருந்து விடுபடுவதோடு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவையும் அதிகரிக்கலாம்
முடிவு
கற்பூரத்தை நுகர்ந்தால் அது அபாயத்தை ஏற்படும். உயிருக்கும் ஆபத்தை கொடுக்கும்