தமிழக அரசு குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது? - 2022 ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அட்டவணை ரிலீஸ்
2022ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு மொத்தம் 32 வகையான தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
இந்நிலையில் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். அதன்படி 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

2022 டிஎன்பிஎஸ்சி அட்டவணை
தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுக்கும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு நடத்தவும் அறிவிப்பு வெளியாகும். அறிவிப்பு வெளியான 75 நாட்கள் கழித்து தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறினார். 2022ஆம் ஆண்டு மொத்தம் 32 வகையான தேர்வுகள் நடைபெறும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்வு அறிவிப்புக்கு முன்பாக பாடத்திட்டம் தொடர்பாக விரிவாக வெளியிடப்படும் என்றார்.

குரூப் 4 தமிழில் பாஸ் தேவை
குரூப் 2 தேர்வுக்கு 5831 காலி பணியிடங்கள் உள்ளதாகவும், குரூப் 4 தேர்வுக்கு 5255 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் கூறிய பாலச்சந்திரன் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார். குரூப் 4 தேர்வு எழுதுபவர்கள் தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

முறைகேடுகள் தடுக்க நடவடிக்கை
கடந்த காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த பாலச்சந்திரன், தேர்வு முறைகேடுகள் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறினார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் யார் தேர்வு எழுதியது என்று தெரியாத அளவிற்கு வரும் காலங்களில் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாகனங்கள் கண்காணிப்பு
தேர்வு எழுதும் மாணவர்கள் ஓஎம்ஆர் விடைத்தாள்களில் கருப்பு மை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் ஓஎம்ஆர் விடைத் தாள்களை எடுத்து வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறினார். தேர்வுகளில் இனிமேல் முறைகேடு செய்ய முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முறைகேடு செய்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் யாரும் மீண்டும் டிஎன்பிஎஸ்சி துறைக்குள் கொண்டு வரப்படவில்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி அட்டவணை
கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழியை கட்டாயப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இன்றைய தினம் தேர்வுக்கான அட்டவணைகளை டிஎன்பிஎஸ்சி துறை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications