IT Jobs: இந்திய ஐடி துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு எழுச்சி.. குவிந்த வேலைவாய்ப்புகள்
பெங்களூர்: கொரோனா தொற்றுநோய் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான தேவையை அதிகரித்திருப்பதால் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை இந்த ஆண்டு இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளன. இதனால் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்தியாவின் முதல் 10 ஐடி நிறுவனங்கள் இணைந்து, 2021 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆறு மாதங்களில் 1.21 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
அதாவது கொரோனா தொற்றுநோய் மென்பொருள் சேவைகளுக்கு வலுவான தேவையை உருவாக்கியுள்ளது.

டாப் 10 சூப்பர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் பணியாளர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2019 இல், டாப் 10 நிறுவனங்கள் 45,649 ஊழியர்களை பணிக்கு சேர்த்தன. ஆனால் இப்போது வெறும் 6 மாதங்களில் டாப் 10 நிறுவனங்கள், 1.21 லட்சம் பேரை வேலைக்கு சேர்த்துள்ளன.

2 லட்சமாக கூடும்
உலகளாவிய நிறுவனங்கள் டிஜிட்டல் துறையில் முதலீடு செய்வதால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2 லட்சமாக உயரும் வாய்ப்பு உள்ளது. மென்பொருள் தொழில் எப்போதுமே நாட்டின் மிகப்பெரிய வேலை வாய்ப்பு உருவாக்கும் துறைகளில் ஒன்றாக உள்ளது. இதில் இந்திய ஐடி நிறுவனங்கள், பிபிஎம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அடங்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐடி துறையின் பங்கு 1992-93 இல் 0.4 சதவீதத்திலிருந்து இப்போது 8 சதவீதமாக வளர்ந்துள்ளது. அதன் அளவு 1991 இல் $ 150 மில்லியனில் இருந்து $ 194 பில்லியனாக விரிவடைந்துள்ளது.

5 ஆண்டுகளில் முதல்முறை
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகர பணியமர்த்தல் அதிவேகமாக அதிகரித்துள்ளது. டாப் 10 ஐடி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 10 லட்சத்தில் இருந்து 40 சதவீதம் அதிகரித்து 14 லட்சமாக அதிகரித்துள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரை பணிக்கு அமர்த்தியுள்ளன. எச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா முறையே 1.76 லட்சம் மற்றும் 1.26 லட்சம் பணியாளர்களுடன் செயல்படுகிறது.

டிசிஎஸ் டாப்
5 லட்சம் ஊழியர்களைக் கொண்டு, டிசிஎஸ் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை முதலாளிகளாக உள்ளது, இந்திய ரயில்வே மட்டுமே டிஎஸ்சை விட அதிக வேலை வாய்ப்பு தரும் ஒரே துறையாக உள்ளது. FY21 இல் நிறுவனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பார்க்கையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களால் சுட்டிக்காட்டப்பட்டபடி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

சிறு நிறுவனங்களுக்கும் லாபம்
"கொரோனா தொற்றுநோய் பெரிய நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தியுள்ளது, இது புதிய திறன்களைக் கொண்டவர்களை அதிக அளவில் பணியமர்த்துவதற்கு வழிவகுத்தது. பெரிய மற்றும் நடுத்தர அளவிலான ஐடி சேவை நிறுவனங்கள் இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சிக்குத் திரும்புகின்றன," என்று பேராசிரியர் ராம்குமார் ராமமூர்த்தி கூறுகிறார். ராமமூர்த்தியின் கருத்துப்படி, "இந்த நிதியாண்டில் இந்தியாவில் டாப் 10 தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் 200,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கூடுதலாக வேலைக்கு அமர்த்தினால் ஆச்சரியப்பட மாட்டேன்." என்கிறார்.












Click it and Unblock the Notifications