தமிழகத்தில் இன்று
சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை
சென்னை:
30 பேர் பலியான சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்கிழமை விடுதலை செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட இந்த ஐவர் மீதும் போதிய சாட்சியங்கள் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
1984-ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரசம்பவத்தில் 30 பேர் பலியாகினர். எம்ஜிஆர் ஆட்சியில் நடந்த இந்த கோர சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக சரவணபவன், பாலசுப்ரமணியம், சந்திரகுமார், லோகநாதன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கை விமான நிலையத்தில் விமானத்தை தகர்ப்பதற்காக சென்னையில் இருந்து இரண்டு சூட்கேஸ்களில்வெடிகுண்டுகளை கடத்த முயன்றபோது இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.
கதிரேசன் என்ற மகேந்திரன், தம்பிராஜா, உமா, விக்னேஸ்வர்ராஜா ஆகிய நால்வருடன் சேர்ந்து இந்த ஐவரும் கூட்டுச் சதி செய்து, இலங்கைவிமானத்தை தகர்க்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி கதிரேசன் என்பர் பெயரில் டிக்கெட்டுகளை ன்பதிவு செய்து சம்பவத்தன்று இரவு விமானத்தில்வெடிகுண்டுகளை கடத்த முயன்றனர். இரண்டு சூட்கேஸ்களில் எடுத்துச் சென்ற வெடிகுண்டுகளை போலீசுக்கு பயந்து விமான நிலையத்திலேயே வைத்து விட்டுஇவர்கள் ஓடிவிட்டனர்.
பின்னர் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் இருக்கும் தகவலை தொலைபேசியில் போலீசுக்கு தெரிவித்தனர். போலீசார் உஷார் அடைவதற்குள் இரவு 10மணியளில் குண்டு வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐவர் மீதும் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் இந்த ஐவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை நீதிபதிகள்ஜெகதீசன், ரவிராஜபாண்டியன் ஆகியோர் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. செவ்வாய் கிழமை நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.
""குற்றம் சாட்டப்பட்ட ஐவர் மீதும் குற்றச் சாட்டுக்கான போதிய சாட்சியங்கள் இல்லை. சந்தர்ப்ப சூழ்நலைகளை சாட்சியங்களாக கொண்டு தான்இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கதிரேசன் என்பவர் உள்பட நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைவிசாரித்தால் தான் குற்றம் தொடர்பாக முழு விவரங்கள் தெரியவரும். அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த ஐவர் மீதும் குற்றத்திற்கான போதிய சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர்களை விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள்தீர்ப்பில் கூறியுள்ளனர்.