மகளின் காதலரைத் தண்டித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு
மதுரை:
ஐ.ஏ.எஸ் அதிகாரி கலைவாணனின் மகளை காதலித்தற்காக வாலிபரை மொட்டையடித்து, மனநோயாளிகள் இல்லத்தில் சேர்த்ததற்காக அவர் மீது பலசெக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஐ.ஏ.எஸ் அதிகரி கலைவாணனின் மகள் மேனகா. இவரும் மானாமதுரை குருந்தான்குளம் வாலிபர் முருகன் என்பவரும் காதலித்து வந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் முருகனை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து ஏர்வாடியில் உள்ள மனநோய் காப்பகத்தில் சேர்த்ததாகத் தெரிகிறது.அங்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து முருகனின் தந்தை வீரணன், மானாமதுரை சிப்காட் போலீஸில் புகார் செய்தார். விஷயம் பகீரங்கமாக வெளியே தெரிந்துவிட,வீரணிடமும் அவரது மகன் முருகனிடமும் சமரசம் பேசப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அர்ஜூனன், மனித உரிமைக் கமிஷனைச் சேர்ந்தவர்கள், தமிழக முதல்வர்,மாவட்ட ஆட்சித்தலைவர், எஸ்.பி என்று பலருக்கும் மனு அனுப்பினார்.
முருகனின் அண்ணன் தனுஷ்கோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில் முருகனை உயர் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி விடுதலை செய்ய வேண்டும் எனவும், சட்ட விரோதமாக அவரை அடைத்து வைத்து கொடுமைபடுத்திய கலைவாணன் ஐ.ஏ.எஸ் தரப்பினர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்திரவிட்டனர்.
இந்த நிலையில்,சிவகங்கை மாவட்ட எஸ்.பி முருகேஸ்வரன் புதன்கிழமையன்று சிவகங்கையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட முருகனின் தந்தைவீரணன் அளித்த புகாரின் அடிப்படையில் 147 ( ஐந்து பேருக்கும் மேற்பட்டோர் கும்பலாக சேருதல்) 363 - தனி நபர் ஒருவரை கடத்தி வருதல், 341 -வழிமறித்தல், 342- தடுத்துப்பிடித்தல், 323- காயம் ஏற்படுத்துதல், 368- மறைத்து வைத்தல், ஆகிய பிரிவின் கீழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி கலைவாணன்,போஸ், பாண்டி மற்றும் பூரணசந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.