கர்நாடக பந்த்: தமிழர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு
பெங்களூர்:
கர்நாடகத்தில் வியாழக்கிழமை நடக்கவுள்ள முழு அடைப்பையொட்டி, அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்காதபடி தீவிர போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
நடிகர் ராஜ்குமார் விடுதலையை வலியுறுத்தி ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் மற்றும் கன்னட திரைப்பட வர்த்தக சபையினர் செப்டம்பர் 28 ம் தேதி முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையே கர்நாடக உயர்நீதிமன்றம் பந்த் நடக்கும் போது அதில் கலந்து கொள்ளும்படி யாரையும் வற்புறுத்தக் கூடாது. சட்டம்-ஒழுங்கு நிலைபாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பெங்களூர் நகரில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், கர்நாடகா, தமிழக எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வன்முறைச் சம்பவங்கள் எதுவும் ஏற்படாதவாறு மத்திய புறக்காவல் போலீஸார், மாநில போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
பெங்களூர் தவிர பதட்டம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படும் மைசூர், மண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, சிக்மகளூர் மற்றும் தும்கூர் பகுதிகளில்கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தப்பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மைசூரில் தசரா விழா நடப்பதால் மைசூர் தவிர்த்து பிற பகுதிகளில் பந்த் நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை நடக்கவுள்ள முழு அடைப்புக்கு பெங்களூர்தமிழ்ச்சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாரும், ராஜ்குமார் ரசிகர்கள் சங்கத் தலைவர் சாரா கோவிந்த்தும் வெளியிட்ட கூட்டறிக்கையில்,நாங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பந்த்தைக் கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தனர்.
போலீஸ் டி.ஐ.ஜி.தினகர் கூறுகையில், பந்த் தை எதிர்நோக்கத் தயாராக உள்ளோம். எந்த அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதவண்ணம் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10, 000 ரிசர்வ் போலீஸாரும், 155 பிளாட்டூன் கர்நாடக மாநிலபோலீஸாரும் பதட்டம் நிறைந்த பகுதிகளில் தீவிர ரோந்துப் பயணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
இதுதவிர பந்த் அறிவித்திருப்பதால் தமிழகத்திலிருந்து பெங்களூர் வரும் லாரிகள், பஸ்கள் அனைத்தும் புதன்கிழமை இரவு முதல் ஓசூரில் நிறுத்தி வைக்கப்படஉள்ளன.
பெங்களூரில் நாளை பந்த்தின் பாதிப்பு அதிகமாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆட்டோ யூனியன்களும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.இதனால், ஆட்டோக்கள் இயங்காது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும்.
அரசு பஸ்கள் இயங்குவதும் சந்தேகமே. ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் அல்சூர், சாந்தி நகர், ராஜாஜி நகர், சிவாஜி நகர் ஆகிய இடங்களில் தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
பந்தை புறக்கணித்தன வட மாவட்டங்கள்:
ராஜ்குமார் கடத்தலை கண்டித்து பந்த் நடத்த பல கன்னட அமைப்புகள் விடுத்துள்ள அழைப்பை கர்நாடத்தின் வட மாவட்டங்கள் புறக்கணித்துவிட்டன.
தங்களை கர்நாடக அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாக இந்த மாவட்டங்கள் புகார் கூறி வந்தன.
இப்போது ராஜ்குமாருக்காக விடுக்கப்பட்டுள்ள பந்த் அழைப்பை இந்த மாவட்டங்கள் புறக்கணித்துவிட்டன. ரெய்ச்சூர், பீதர், கொப்பல், குல்பர்கா,பீஜப்பூர், பெல்காம், தார்வாட், ஹோஸ்பேட் ஆகிய மாவட்டங்கள் இந்த பந்தை புறக்கணித்துள்ளன.
பந்தை ராஜ்குமாரே ஆதரித்துள்ளதால், நிச்சயம் பந்த் நடக்கும் என ராஜ்குமார் ரசிகர்கள் சங்கத் தவைவர் சாரா. கோவிந்து கூறியுள்ளார். மக்கள்தாங்களாகவே கடைகளை மூடி பந்துக்கு ஆதரவு தர வேண்டும் என ராஜ்குமாரின் மகனும் நடிகருமான சிவராஜ் குமார் மிரட்டியுள்ளார்.
பந்தை ஒட்டி மதுக்கடைகளை 2 நாட்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.