இலங்கையில் 42 பேர் ஜம்போ அமைச்சரவை பதவியேற்பு
கொழும்பு:
கொழும்பு நகரில் ஒரு பக்கம் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு 2 பேர் பலியானநேரத்தில், மறுபுறம் 42 பேர் கொண்ட அமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டது.
பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தலைமையிலான கூட்டணி அரசில் 42அமைச்சர்களுக்கும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பலத்த பாதுகாப்புக்கு இடையே பதவியேற்பு விழா நடைபெற்றது.
அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி தவிர, ஆதரவு கட்சிகளான இலங்கை முஸ்லிம்காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சிலோன் ஒர்க்கர்ஸ் காங்கிரஸ்கட்சிக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 42 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் இல்லாதஅளவுக்கு மிகப் பெரிய அளவில் இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கட்சி மாறியரோன்னி டிமெல், விஜயபாலா மெண்டிஸ், சரத் அமுனுகாமா ஆகியோருக்கும் முக்கியபொறுப்புக்கள் தரப்பட்டுள்ளன.
முக்கியமான நிதி மற்றம் ராணுவத் துறைகளை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவேவைத்துக் கொண்டார். முன்னாள் துணை ராணுவ அமைச்சராக இருந்த அனுருத்தாரதவத்தேவுக்கு மின் மற்றும் எரிசக்தித் துறை வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கியமான துறையான வெளியுறவுத் துறை மீண்டும் லக்ஷ்மண்கதிர்காமரிடம் தரப்பட்டுள்ளது. செய்தித்துறை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா,நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கட்டுமானத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராஃப் ஹக்கீமுக்கு வர்த்தகம், கப்பல்போக்குவரத்து மற்றும் இஸ்லாமிய விவகாரத் துறையும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு வடமாநில மறுவாழ்வு மற்றும்வடகிழக்கு தமிழ் விவகாரங்கள் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலோன் ஒர்க்கர்ஸ் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு எஸ்டேட்உள்கட்டமைப்பு மற்றும் கால்நடை மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் இணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் மறைந்தஅஷ்ரப்பின் மனைவியுமான ஃபெரியல் அஷ்ரப்புக்கு கிழக்கு மாநில வளர்ச்சி மற்றும்மறுகட்டமைப்பு மற்றும் கிராமப்புற வீட்டு வசதித் துறை வழங்கப்பட்டுள்ளது.
அவர் இன்னும் சோகத்தில் இருப்பதால், வியாழக்கிழமை பதவியேற்றுக்கொள்ளவில்லை. பிறகு ஒருநாள் அவர் பதவியேற்றுக் கொள்வதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.
பிற முக்கிய பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம்:
பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே - புத்த மத விவகாரம் மற்றும் தோட்டக்கலை
டி.எம். ஜெயரத்னே - விவசாயம்
தினேஷ் குணவர்தனே - போக்குவரத்து
ரிச்சர்டு பதிரானா - பொதுத்துறை நிர்வாகம்
சுசில் பிரேமஜெயந்த் - கல்வி
லெஸ்லி குணவர்தனே - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
அலாவி மெளலானா - தொழிலாளர் நலன்
ஜான் சேனவீரத்னே - உடல் நலம்
ஏ.ஹெச்.எம். பெளசீ - நெடுஞ்சாலை
ஜி.எல். பெரீஸ் - அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தொழில் வளர்ச்சி
பட்டி வீரகூன் - நீதித் துறை.
ஐ.ஏ.என்.எஸ்.