என்ன செய்யப் போகிறார் "அரசியல் சானக்கியர்?
சென்னை:
தமிழக அரசியல் அரங்கில், மீண்டும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் அரங்கேறியிறுக்கிறது.
அரசியலும், சந்தர்ப்பவாதமும் எப்போதுமே பிரிக்க முடியாததுதான். அதிலும், தமிழக அரசியலில் இது மிகவும்சகஜமான ஒன்று. தாறுமாறாக திட்டிக் கொள்வதும், நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல பேசிக் கொள்வதும்சாதாரணம்.
திட்டிய கையோடு, ஆரத் தழுவி அன்பொழுக மீண்டும் சேருவதும் ஜீரணிக்க முடியாவிட்டாலும் கூட அடிக்கடிதமிழக அரசியலில் காணப்படும் காட்சிகள். இப்போது மீண்டும் ஒரு காட்சி அரங்கேறியுள்ளது.
காட்சி 1: நாடாளுமன்றத் தேர்தல், ஆண்டு 1999. தொகுதிப் பங்கீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழகக் கட்சிகளுக்குள் குழப்பம். பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வாழப்பாடி ராமமூர்த்திக் கட்சிக்கும்சேர்த்து 9 சீட்டுகளை ஒதுக்கினார் திமுக தலைவர் கருணாநிதி.
9-ல் 2 சீட்டுக்கள் வாழப்பாடிக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சீட் மட்டுமே தரப்படும் என்று பா.ம.க.தலைவர் ராமதாஸ் கூறி விட்டதால், வாழப்பாடி ஏற்றுக் கொள்ள மறுத்தார். கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.இறுதி வரை வாழப்பாடி ஒரு சீட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில், பிற தலைவர்களின் தலையீட்டுக்குப்பிறகு ஏற்றுக் கொண்டார். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தார்.
காட்சி 2: சேலம் தொகுதியில் தான் தோற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம் என பகிரங்கமாக கூறினார்வாழப்பாடி ராமமூர்த்தி. இதை பா.ம.க. மறுத்தது. ஆனால் ஆதாரம் இருப்பதாக உறுதியாகக் கூறினார் வாழப்பாடி.முதல் முறையாக இரு வன்னியத் தலைவர்களும் பகிரங்கமாக மோதிக் கொண்டனர்.
காட்சி 3: வாழப்பாடியைத் தாக்கி ராமதாஸும், ராமதாஸைத் தாக்கி வாழப்பாடியும் மாறி, மாறி தாறுமாறாகஅறிக்கைகள் விட்டனர். தமிழக அரசியலில் இப்படி ஒரு அறிக்கைப் போர் இதுவரை நடந்ததில்லை என்ற நிலைஉருவானது.
காட்சி 4: கருணாநிதி தலைமையில், தேசிய ஜனநாயகக் கட்சிக் கூட்டணியின கூட்டம் நடந்தது. வாழப்பாடிக்கும்,ராமதாஸுக்கும் இடையிலான பூசலைத் தீர்ப்பதே இதன் முக்கிய நோக்கம். கூட்டத்தில் வாழப்பாடி கலந்துகொள்ளவில்லை.
காட்சி 5: வாழப்பாடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலைவர்கருணாநிதிக்குக் கோரிக்கை விடுத்தார் டாக்டர் ராமதாஸ். இதை வாழப்பாடி நிராகரித்தார். ராமதாஸ் யார் என்னைநீக்கச் சொல்ல என்று சவால் விடுத்தார்.
காட்சி 6: ராமதாஸுக்கு எதிராக புதிதாக வன்னியர் சங்கத்தைத் தொடங்கியவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்வாழப்பாடி ராமமூர்த்தி. வன்னிய சமுதாய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் ராமதாஸ் என்று புகார்கூறினார். இரு தரப்பு உரசலும் அதிகரித்தது.
காட்சி 7: வாழப்பாடி ராமமூர்த்தியின் தலையைக் கொய்து ராமதாஸிடம் தருவேன் என்று பா.ம.க முக்கியத்தலைவர் காடுவெட்டி குரு பேசியதாக செய்திகள் வந்தன. தமிழகத்தைப் பரபரப்பாக்கியது இந்தச் செய்தி. இதைகுருவும், ராமதாஸும் மறுத்தனர்.
காட்சி 8: பாண்டிச்சேரிக்கு சென்ற ராமதாஸ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வடமாவட்டங்களில், பா.ம.க.வினர் வரலாறு காணாத வன்முறையில் இறங்கினர். பல அரசு பஸ்கள் தாக்கப்பட்டன.பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
காட்சி 9: சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுடன் சேர்ந்து விடுவார் என்று கூறினார் வாழப்பாடி. இதைபா.மக. தரப்பு மறுத்தது. என்ன நடந்தாலும், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருப்போம் என்றார்ராமதாஸ்.
காட்சி 10: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலாதவும், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோவும், 2 முறை அவரவர்இல்லத்தில் சந்தித்துக் கொண்டனர். அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. சேரலாம் என்ற பேச்சு எழுந்தது.
காட்சி 11: எந்தக் கட்சியும் தங்களது கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நாங்கள் காத்திருக்கவில்லைஎன்று அறிவித்தார் ஜெயலலிதா.
காட்சி 12: பிப்ரவரி 5-ம் தேதி மாலை பா.ம.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் என்.டி.சண்முகம்,பொன்னுச்சாமி இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். சில நிமிடங்களிலேயே டாக்டர்ராமதாஸ் தலைமையில் பா.ம.க. அமைச்சர்கள் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகுவதாக தெரிவித்தனர். வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவும் தெரிவித்தனர்.
காட்சி 13: செவ்வாய்க்கிழமை ஜெயலலிதாவைச் சந்தித்தார் ராமதாஸ். சகோதரர் கருணாநிதி எங்களை அழிக்கப்பார்த்தார். ஆனால் சகோதரி ஜெயலலிதா காக்க நினைத்தார் என்று கருணாநிதியைக் குறை கூறினார் ராமதாஸ்.அதிமுக கூட்டணியில் பா.ம.க. இணைந்து விட்டதாகவும் அறிவித்தார்.
இதுவரை கண்ட காட்சிகள் அரசியலில் ஒன்றும் புதிதல்ல. சாதாரணமாக, அனேகமாக எல்லாக் கட்சிகளிலும்நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் இனி வரும் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை யோசிப்போமா?.
இப்போதைய சூழ்நிலையில், திமுக, அதிமுக, ஜாதிக் கட்சிகள் அடங்கிய கூட்டணி என மூன்று கூட்டணிகள்தான்மிகப் பெரிய கூட்டணியாகத் தெரிகின்றன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு இது மிக சாதாரண கூட்டணியாகத்தெரியலாம். ஆனால் இந்தக் கூட்டணிக்குள்தான் எத்தனைக் குழப்பங்கள்!.
திமுக கூட்டணியில் பாரதீய ஜனதா, மறுமலர்ச்சி திமுக, ஆர்.எம்.வீரப்பனின் கட்சி, திருநாவுக்கரசுவின் கட்சி,வாழப்பாடி ராமமூர்த்தியின் கட்சி ஆகியவை உள்ளன.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சில உதிரிக் கட்சிகள் உள்ளன.
ஜாதிக் கட்சிகள் அடுத்த அணியாக அமைந்துள்ளன. புதிய நீதிக் கட்சி, மக்கள் தமிழ் தேசக் கட்சி ஆகியவை இந்தக்கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்றன.
தலித் கட்சிகளும் இருக்கின்றன. இவை உடைந்து போயுள்ளன. தென் மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ளபுதிய தமிழகம் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. ஆனால் வட மாவட்டங்களில் ஓரளவு பெயர்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணியில்உள்ளது.
இப்போது தமிழகத்தில் அடுத்து என்ன நிகழலாம்?
ஊகம் 1: பா.ம.கவை இழுத்துள்ளதன் மூலம், த.மா.காவை மறைமுகமாக கூட்டணியிலிருந்து ஜெயலலிதா விலக்கிவிட்டதாகவே எடுத்துக் கொள்ள முடியும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பா.ம.க. இடம் பெறும்கூட்டணியில் இடம் பெற த.மா.கா. விரும்பாது. எனவே அதிமுக கூட்டணியிலிருந்து த.மா.கா. வெளியேறலாம்.
ஊகம் 2: தமிழ் மாநில காங்கிரஸை இழுக்க ஆளும் திமுக கூட்டணி முயலலாம். த.மா.கா.வுக்குக் கடந்த முறைநடந்த சட்டசபைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் சீட் கொடுக்கப்படலாம். மூப்பனார் பிரதமர் பதவிக்குப்போட்டியிட்டால் அதை திமுக ஆதரிக்கும் என்று அமைச்சர் அன்பழகன் கூறியிருப்பது நினைவிருக்கலாம்.அதற்கான முயற்சி கூட ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது. தேவைப்பட்டால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின்உதவியும் நாடப்படலாம்.
ஊகம் 3: புதிதாகக் கிளம்பியுள்ள ஜாதிக் கட்சிகளை அப்படியே அமுக்கி தங்களது கூட்டணியில் சேர்க்க அதிமுகமுயற்சிக்கலாம். இதன் மூலம் தங்களது பலத்தை இரட்டிப்பாக்க ஜெயலலிதா நினைக்கலாம். இதே முயற்சியைதிமுகவும் செய்யயலாம்.
இப்போதைய நிலையில் அதிமுகவின் பக்கம் கொஞ்சம் தராசு இறங்கியிருக்கிறது. ஜெயலலிதா மீதானவழக்குகளை மக்கள் மறந்து விட்டதாகவே கருதப்படுகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்பிலும் இதுதெளிவாகியுள்ளது.
பின் விளைவுகள்: பாட்டாளி மக்கள் கட்சி விலகி விட்டதால், தமிழக அரசியலில் என்ன பாதிப்பு ஏற்படலாம்?
தென் மாவட்டங்களில் ஆளும் திமுக கூட்டணிக்கு எதிராக அலை வீசுகிறது. இதை தனக்குச் சாதகமாக்க அதிமுகமுயலலாம். அதே சமயத்தில், வட மாவட்டங்களில் பா.ம.க. வுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. சமீபத்தியவன்முறைச் சம்பவங்களினால், கெட்ட பெயர் சம்பாதித்துள்ளது பா.ம.க. இதை தனக்குச் சாதகமாக்க திமுககூட்டணி முயலலாம்.
அப்படிச் செய்ய முயன்றால், தலித்களின் வாக்குகள் முக்கியம். எனவேதான், த.மா.காவை தங்கள் பக்கம் இழுக்கதிமுக முயலும். த.மா.கா. வந்தால் மூப்பனாருடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பும் திமுக கூட்டணியில் இணைந்து விடும். அப்படிப் போனால், எதிர் அணியில் இணைய புதிய தமிழகம்முயலலாம்.
எனவே, வரும் தேர்தலில் தலித் கட்சிகள், ஜாதிக் கட்சிகள் ஆகியவைதான் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன.கூடவே மூப்பனாரும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ராமதாஸ் கூட்டணியிலிருந்து விலகியது குறித்து இதுவரை கருணாநிதி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.அரசியல் சானக்கியர் எனக் கூறப்படும் கருணாநிதி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதே தமிழகம்மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் எழுந்துள்ள எதிர்பார்ப்பு.
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது பா.ம.க.