அதிமுக பாடகர் கொலை: தேர்தல் போட்டி காரணமா?
சென்னை:
தேர்தல் போட்டி காரணமாகவே அதிமுக மேடைப் பாடகர் தோட்டம் சேகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் அதிமுக மேடைப் பாடகரும், பிரபல அதிமுக பிரமுகருமான தோட்டம் சேகர்படுகொலை செய்யப்பட்டார். அவரை 12 பேர் கொண்ட கும்பல் கொன்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் முக்கிய குற்றவாளியாக மார்க்கெட் முரளி என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சேகர் கொலைக்கு உள்ளாட்சித் தேர்தல் போட்டிதான் காரணமாக இருக்கலாம் என்று போலீஸார்சந்தேகிக்கிறார்கள். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் திருவல்லிக்கேணி வார்டில் போட்டியிட தோட்டம் சேகர் முடிவுசெய்திருந்தார். கடந்த தேர்தலிலும் அவரே போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை.
இந்தத் தேர்தலிலும் தோட்டம் சேகரே நிற்பதா என்று அதிமுகவில் சிலர் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தோட்டம் சேகருக்குத்தான் திருவல்லிக்கேணி வார்டு ஒதுக்கப்படும் என்று அதிமுக வட்டாரத்தில்பேச்சு அடிபட்டது. இதையடுத்து எதிர் கோஷ்டியினரின் அதிருப்தி கோபமாக மாறியது.
இதையடுத்து தோட்டம் சேகரை கூலிப்படை அமைத்துக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.இதை தோட்டம் சேகரின் விரோதியமான மார்க்கெட் முரளியை வைத்து நிறைவேற்றவும் அவர்கள் முடிவுசெய்ததாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு சந்தேகமும் உலா வருகிறது. சமீபத்தில் இதே திருவல்லிக்கேணி பகுதியில் ஸ்டாலின் என்ற அதிமுகதொண்டர் கொலை செய்யப்பட்டார். அவர் தோட்டம் சேகரின் நெருங்கிய நண்பர்.
இந்தக் கொலை வழக்கில் மார்க்கெட் முரளியை போலீஸார் தேடி வந்தனர். தன்னை கொலை வழக்கில் சிக்கவைத்தது தோட்டம் சேகர்தான் என்று மார்க்கெட் முரளி நினைத்ததாகவும், அதற்குப் பழி வாங்கவே அவர்,தோட்டம் சேகரை கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தோட்டம் சேகர் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 7 போலீஸ் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.