அத்வானி உத்தரவால் சோனியாவை தாக்கும் ஜெ.
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீதான தாக்குதலை முதல்வர் ஜெயலலிதா இன்றும் தொடர்ந்தார்.
நேற்று உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்துவிட்டு வந்து நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா திடீரென சோனியாவைத்திட்ட ஆரம்பித்தார்.
தானே கேள்வி கேட்ட ஜெயலலிதா:
நிருபர்கள் காவிரி குறித்தும் வீரப்பன் குறித்து மட்டுமே கேள்வி கெட்டுக் கொண்டிருந்த நிலையில் அரசியல் கேள்விகள் கேட்கமாட்டீர்களா என்று ஜெயலலிதாவே நிருபர்களிடம் கேட்டார். இதையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன்கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்றார்.
அத்தோடு நிருபர்கள் அந்தக் கேள்வியை விட்டுவிட்டு வேறு கேள்விகலைக் கேட்க ஆரம்பித்தனர்.
காரணம் கேளுங்கள்...
அப்போது மீண்டும் நிருபர்களை நிறுத்திய ஜெயலலிதா, காங்கிரசுடன் ஏன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கேட்க மாட்டீர்களாஎன்றார்.
இதையடுத்து ஏன் என்று நிருபர்கள் கேட்டனர்.
அப்போது பேசிய ஜெயலலிதா, சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுக்காரர், அவரை பிரதமராக்க விட மாட்டேன். காங்கிரசுக்கு ஒருஇந்தியத் தலைவர் கிடைக்காதது வெட்கக் கேடானது என்று ஆரம்பித்து அவரை மிகக் கடுமையாகத் தாக்கினார்.
காவிரி, வீரப்பன் விவகாரம் குறித்து மட்டுமே அவர் பேசுவார் என்று எதிர்பார்த்த நிருபர்களுக்கு ஜெயலலிதாவின் இந்தசம்பந்தமில்லாத பேச்சு பெரும் ஆச்சிரியத்தைத் தந்தது.
அத்வானி சந்திப்புக்குப் பின்....
காங்கிரசுடன் குறிப்பாக சோனியாவுடன் 3 தேர்தல்களில் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட ஜெயலலிதா அத்வானியைச்சந்தித்துவிட்டு வந்த பின்னர் திடீரென சோனியாவைத் தாக்க ஆரம்பித்தது பல வகையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
டான்சி வழக்கில் திமுக போட்ட அப்பீல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம்கொடுத்த அதிரடித் தீர்ப்பினால் தேர்தலிலேயே போட்டியிட முடியாத நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்று மீண்டும் முதல்வராகிவிட்டாலும் கூட இப்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குஜெயலலிதாவின் தலைக்கு மேல் கத்தியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசுக்கு திடீர் ஜால்ரா:
இந் நிலையில் மத்திய அரசுடன் சமரசம் செய்து கொள்ளும் முயற்சிகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
காங்கிரசுடனான உறவை முழுவதுமாக துண்டித்துவிட்டு வந்தால் மட்டுமே உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கும் எனஅத்வானி தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து உடனே காங்கிரஸைக் கண்டித்து ஜெயலலிதா பேசியுள்ளதாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறுமாநிலங்களில் ஜெயலலிதாவின் கொடும்பாவிகளை காங்கிரசார் எரித்து வருகின்றனர்.
நமது ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டுவிட்டு இப்போது நம்மைக் குறை கூறும் ஜெயலலிதாவுடன் இனி காங்கிரஸ் எக்காரணம் கொண்டும் அணி சேரக் கூடாது என்ற கோரிக்கை காங்கிரசில் வலுத்து வருகிறது.
கிரிமினல் வழக்குகளே காரணம்: காங்:
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், ஜெயலலிதா பல்வேறுகிரிமினல் வழக்குகளில் மாட்டியுள்ளார். அதில் இருந்து தப்புவதற்காக பா.ஜ.கவின் உதவியைக் கோரியிருக்கிறார். இந்த உதவிவேண்டுமானால் சோனியாவை விமர்சிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அத்வானி விதித்திருக்கிறார்.
இதனால் பா.ஜ.க போடும் மியூசிக்குக்கு ஜெயலலிதா ஆடுகிறார். சோனியா குறித்து பேச ஜெயலலிதாவுக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் ஞான போதனைகள் எல்லாம் இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்றார்.
ஜெவுக்கு கம்யூனிஸ்ட்களும் எதிர்ப்பு:
மார்கிச்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் பேசுகையில், இந்தியாவில் பெரும்பான்மையானமாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆளுகிறது. இதற்கு சோனியாவை மக்கள் ஏற்றுக் கொண்டது தான் காரணம்.
அவர் நமது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி, இந்திராவின் மருமகள். அதற்கும் மேலாக மக்கள் ஏற்றுக் கொண்டதலைவர். இதனால் ஜெயலலிதாவின் பேச்சு வேறு எதற்காகவோ பேசப்பட்டதாகத் தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்என்றார்.
மீண்டும் ஜெ. தாக்கிப் பேச்சு:
இந் நிலையில் சோனியா காந்தியை முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தாக்கிப் பேசினார். தேர்தல் சீர்திருத்தச் சட்டத்துக்கு முதலில்ஆதரவு தெரிவித்த சோனியா காந்தி இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்தச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சீர்திருத்தத்தை ஏற்க மறுத்து ஜனாதிபதி கலாம் அதைத் திருப்பி அனுப்பினார்.இதையடுத்து கலாமுக்கு சோனியா ஆதரவு தெரிவித்தார்.
இந் நிலையில் சோனியா முன்பு ஒரு பேச்சும் இப்போது ஒரு பேச்சும் பேசுவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். பல்ட் அடிப்பதேசோனியாவுக்கு வழக்கமாகிவிட்டதாக டெல்லியில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் கருத்து:
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சுக்கு காங்கரிஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப.சிதம்பரம கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜிவ் காந்தியின் உயிர் தியாகத்தால் 1991ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பின்னர் மதுரையில் நடந்தக் கூட்டத்தில்அவரையே தரக் குறைவாகப் பேசினார். அதை மறந்து கூட்டணி வைத்தோம்.
1996ல் மூப்பனார் உதவியால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பின்னர் சேலத்தில் நடந்த கூட்டத்தில் மூப்பனாருக்கும் ராஜிவ்கொலைக்கும் தொடர்பு இருப்பதாகக் கொச்சைப்படுத்தினார். அதையும மறந்து மீண்டும் கூட்டணி வைத்தோம்.
2001ம் ஆண்டு சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா இன்று சோனியாவை தரக் குறைவாகப் பேசியுள்ளார்.ய
இதனால் இவருடன் இனிமேல் கூட்டணி எல்லாம் வைத்துக் கொள்ளாமல் கடுமையாக எதிர்க்க வேண்டும். வரும் 2004ம் ஆண்டுநாடாளுமன்றத் தேர்தலிலும் 2006ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலிலும் ஜெயலலிதாவைத் தோற்கடிப்பதே தங்கள் முதல்கடமை என காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும்.
சோனியாவை ஜெயலலிதா தாக்கிப் பேசி இருப்பது தற்செயலானது அல்ல. தன் மீதான விவகாரங்களில் இருந்து தப்ப,பா.ஜ.கவுடன் நெருங்குவதற்காக ஜெயலலிதா எடுத்துள்ள அஸ்திரம் இது என சிதந்பரம் கூறியுள்ளார்.
சோனியா குறித்த ஜெயலலிதாவின் பேச்சுக்கு பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் இருந்தும் எதிர்ப்புகிளம்பியுள்ளது. சோனியாவை மக்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் அவர் மீது விமர்சனம் செய்ய ஜெயலலிதா யார் என்று கேட்டார்அவர்.
இனியும் ஜெயலலிதா தொடர்ந்து சோனியாவை விமர்சித்தால் ஜெயலலிதாவை தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல விவரங்கள்வெளியில் வரும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.