மண்டியாவில் ஊரடங்கு
மண்டியா:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடுவதை எதிர்த்து மண்டியாவில் இன்று தொடங்கிய பந்த்தில் பெரும்கலவரம் வெடித்தது. இதையடுத்து அந்த மாவட்டத்தின் 5 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்ப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். 2 போலீஸ் ஜீப்புகளும் 2 அரசுவாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூடத் திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் பல கன்னட வெறி அமைப்புகளும் விவசாயிகளும் சேர்ந்து கொண்டு தமிழக வாகனங்களைக்கொளுத்துவது உள்ளிட்ட பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்துக்கு நீர் விடுவதை எதிர்த்து மண்டியா மாவட்டம் முழுவதும் கர்நாடக விவசாயிகள் இன்று முதல்காலவரையற்ற பந்த்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து மண்டியா முழுவதும் கடைகளும் வர்த்தகநிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
தொடர் உண்ணாவிரதம்:
மண்டியா நகரில் உள்ள வெள்ளி விழாப் பூங்காவில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏவான ஆத்மானந்தா உள்ளிட்டதலைவர்கள் காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிதொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.ஆனால் போலீசார் அதை அனுமதிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரமாகவாய்த் தகராறு ஏற்பட்டது.
மூண்டது வன்முறை:
இந்நிலையில் திடீரென்று போலீசார் மீது போராட்டக்காரர்கள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். போலீசாரைநோக்கிக் கற்களையும் வீசினர். இதனால் சில போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து போலீசாரும் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி விரட்டினர். அவர்கள் மீது போலீசார்கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.
இதனால் சிதறி ஓடிய கலவரக்காரர்கள் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு போலீஸ் ஜீப்புகளை தீயிட்டுக்கொளுத்தினர். பின்னர் அருகிலிருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தையும் கல் வீசித் தாக்கி அதன் பெயர்ப்பலகையை உடைத்து எறிந்தனர்.
போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியே போர்க்களம் போல்காட்சியளித்தது.
போலீசாருக்கு உதவியாக அதிரடிப் படையினரும் ஓடி வந்தனர். போலீசாரைத் தாக்கிய விவசாயிகளையும் கன்னடவெறியர்களையும் அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து அடித்தனர்.
அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர். அந் நிலையில் திடீரென பயங்கரமழை பெய்யத் தொடங்தியது. இதனால் போராட்டக் காரர்கள் கலைந்து ஓடி விட்டனர். இப்போது நிலைமைகட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அப்பகுதியில் பதட்டம் தணியவில்லை.
இதையடுத்து மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டிணம், பண்டவ புரா, முட்டூர், தொட்டி ஆகிய 5 நகர்களிலும் 3 நாட்களுக்குஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட எஸ்.பி. கணிராம் தெரிவித்தார்.
தடை உத்தரவு:
முன்னதாக நேற்று முன் தினம் முதலே இம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்ததடையுத்தரவையும் மீறி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஆனால், போலீசார் மீதான தாக்குதலையடுத்து ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தால் பெங்களூர்- மைசூர் இடையிலான போக்குவரத்து கடந்த 3 நாட்களாகபாதிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே அனைத்து ரயில்களையும் பெங்களூர் வரை மட்டுமே இயக்குவதாகஅறிவித்துள்ளது.
நாளையும் தமிழக ரயில்கள் மைசூர் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த கலவரத்தையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆத்மானந்தா உள்ளிட்ட பல விவசாயிகளையும் போலீசார்கைது செய்தனர்.
பெங்களூரில்...
முன்னதாக நேற்று பெங்களூரில் 144 தடையுத்தரவை மீறிப் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் நாகேகவுடா உள்ளிட்ட 61 பேரை போலீசார் கைது செய்தனர். கே.ஆர். சர்க்கிளில் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து பெங்களூர் நகர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 21 பட்டாலியன் படைகளும்ஆயுதப் படையினரும் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.