ஜெ. அணி மூன்றாம் தர அணி: பாஜக பதிலடி- சட்டசபையில் முதல்முறையாக வெளிநடப்பு
சென்னை:
காவிரிப் பிரச்சினையில், யாரையும் மதிக்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யாததன் மூலம் தனது கடமையைநிறைவேற்ற பிரதமர் வாஜ்பாய் தவறி விட்டார் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, அரசுக்கு எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்தபோதெல்லாம் அதை வேடிக்கை மட்டுமே பார்த்துபழக்கப்பட்ட பா.ஜ.க. எம்எல்ஏக்கள் இன்று முதல்முறையாக வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே ஜெயலலிதா தலைமையில் தேசிய அளவில் அமையப் போகும் அணி, மூன்றாம் தர அணியாகவேஇருக்கும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இன்று தமிழக சட்டசபையில் துணை நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து நிதித் துறை அமைச்சர்பொன்னையன் பேசியதாவது:
மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கும் விஷயத்தில் பாரபட்சம் காட்டி வருகிறது. வளர்ச்சி அடைந்த மாநிலம்என்ற காரணத்தைக் கூறி, கடந்த 4 வருடங்களில் தமிழக அரசுக்குச் சேர வேண்டிய ரூ. 2,946 கோடியைத் தரமறுத்து விட்டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, பாமக, மதிமுக அமைச்சர்கள் அந்த நிதியைப் பெற்றுத்தருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார்.
இதையடுத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, நேற்று போலவே, இன்றும் மத்திய அரசை கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கர்நாடக அரசு காவிரியில்தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி கர்நாடக அரசு செய்யாவிட்டால், மத்திய அரசுஅரசியல் அமைப்புச் சட்டப்படி என்ன்ென நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து பிரதமருக்கு விரிவானகடிதம் எழுதியிருந்தேன்.
காவியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடகம் அதை செய்யாவிட்டால்,அரசியல் சட்டப்படி அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதில் நான் கோரியிருந்தேன்.
ஆனால் பிரதமர் அதைச் செய்யத் தவறி விட்டார். இதன் மூலம் தனது கடமையை நிறைவேற்றத் தவறி விட்டார்.இதன் மூலம் நாட்டுக்கு குற்றம் இழைத்து விட்டார் வாஜ்பாய். வரும் ஜனவரி மாதம் கூடவிருக்கும் சட்டசபைக்கூட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார் ஜெயலலிதா.
மத்திய அரசு மீதும், வாஜ்பாய் மீதும் ஜெயலலிதா சரமாரியான புகார்களைத் தெரிவித்ததைக் கண்டித்து பா.ஜ.க.உறுப்பினர்கள் முதன்முறையாக வெளிநடப்புச் செய்தனர்.
அப்போது பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, காவிரி நதி நீர் விஷயத்தில் கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிப்பது போல் தமிழக முதல்வர் செய்வதில்லை என்றார்.
இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, எந்த ஒரு விஷயத்திலும் என்னையும், எனது அரசையும் குறை கூறி வருவதேஎதிர்க் கட்சிகளின் வேலையாகப் போய்விட்டது. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் காவிரி விஷயத்தில்அரசை ஆதரிக்கின்றன. இங்கே எதிர்ப்பதே வேலையாகிவிட்டது என்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காவிரிப் பிரச்சனையை வைத்தே காங்கிரசையும் பா.ஜ.கவையும் ஜெயலலிதாஉண்டு, இல்லை என்று ஆக்குவார் என்று தெரிகிறது.
மூன்றாந்தர அணி: பாஜக
இதற்கிடையே இன்று சென்னை நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன்,
இந்தியாவைப் பொருத்தவரை 3-வது அணி என்று கூறிக் கொண்டு இதற்கு முன் அணி சேர்ந்தவர்கள், மூன்றாந்தரஅணியாகவே இருந்திருக்கிறார்கள்.
அரசியல் வரலாற்றைப் பார்த்தோமானால், 3வது அணியை மக்கள் ஏற்கவில்லை என்பது புரியும். அந்தஅணிகளால் தேசிய அளவில் குழப்பங்களே ஏற்பட்டுள்ளன. எனவே, ஜெயலலிதாவின் முயற்சியும் அப்படித்தான்முடியும். நள்ளிரவுக்கு மேல் மதுக் கடைகளை திறந்து வைக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டம்ஒழுங்கு சீர் கெடவே வழி வகுக்கும் என்றார்.