அம்மா.. தாயே: ஜெவின் கருணைக்கு ஏங்கும் தமிழக பா.ஜ.க.
சென்னை:
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு இடத்திலும் அதிமுகவே தனித்து போட்டியிடும் என்றும்,ஒருவேளை கூட்டணி ஏற்பட்டால் குறைந்தபட்சம் 33 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை கொளப்பாக்கம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் வெளியிட்டார். இதனால் பா.ஜ.க. மற்றும்பா.ம.க. ஆகியவை அதிர்ந்து போயுள்ளன.
காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்டகட்சிகளுடன் திமுக கூட்டணியை அமைத்துவிட்டது. பா.ம.கவையும் கூட்டணிக்குள் இழுக்க துரைமுருகன்மூலமாக டாக்டர் ராமதாசுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி.
ராமதாஸ் குறைந்தபட்சம் 8 இடங்கள் கேட்பதாகவும், ஆனால் 6 இடம் தருவதாக திமுக கூறுவதாகவும் தெரிகிறது.கடைசியில் 7 இடங்களைத் தந்து ராமதாஸை சரிக்கட்டிவிடலாம் என திமுக நினைக்கிறது.
ஆனால், அதிமுக கூட்டணிக்குப் போனால் திமுக தரும் இடங்களுக்கு சமமான இடங்களும், கூடவே தேர்தலைசந்திக்கத் தேவையான பணமும் கிடைக்கும் என பா.ம.க கருதுகிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதாவை நம்பி எந்தமுடிவும் அவசரப்பட்டு எடுக்க ராமதாஸ் தயாராக இல்லை. இதனால் தான் திமுகவுடன் ஒரு பக்கம் பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறார் டாக்டர்.
தமிழக பா.ஜ.கவை பொறுத்தவரை கிட்டத்தட்ட மரண பயத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிடுவதும் தூக்குபோட்டுக் கொள்வதும் ஒன்றே என்பதால் எப்படியாவது அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துவிட முயல்கிறது.ஆனால், பா.ஜ.க. கூட்டணியை ஜெயலலிதா விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பா.ம.க. மட்டும் போதும்என்று ஜெயலலிதா நினைப்பதாகத் தெரிகிறது.
துணைப் பிரதமர் அத்வானி ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டது கூட கடும் பிரயாசத்துக்குப்பின்னர் தான் என போயஸ் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் அவருடன் பேசுவதை ஜெயலலிதாதவிர்த்ததாகவும் அத்வானி தரப்பில் தொடர்ந்து முயன்றதால் தான் கடைசியில் இறங்கி வந்து அவருடன்ஜெயலலிதா பேசியதாகவும் கூறப்படுகிறது.
வாஜ்பாயை பிரதமர் என முன்னிறுத்தினால் பா.ஜ.கவோடு கூட்டணி சேர நான் தயாராக இல்லை என ஜெயலலிதாகூறியதாகவும் இதற்கு அத்வானி தரப்பில் இருந்து சமாதானம் சொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. தேர்தலில் ஓட்டுவாங்க வாஜ்பாயின் முகம் தேவைப்படுவதால் அவரை ப்ரஜெக்ட் செய்வோம், மற்றபடி அடுத்த பிரதமரை கட்சிதான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க. தரப்பில் இருந்து ஜெயலலிதாவுக்கு உறுதிமொழி தரப்பட்டதாகவும்தெரிகிறது.
இதையடுத்தே கூட்டணிக் கட்சிகளுக்கு 7 சீட் என ஜெயலலிதா முடிவு செய்து அதை கொளப்பாக்கம் அதிமுககூட்டத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தனியே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் இந்த 7இடங்களையும் தானே பெறலாம் என நினைக்கிறார் ராமதாஸ். ஆனால், எங்களை விட்டுவிட்டுப் போய்விடவேண்டாம் என அவரை கெஞ்ச ஆரம்பித்துள்ளனர் தமிழக பா.ஜ.கவினர்.
7க்கு மேல் ஒரு சீட்டும் இல்லை என ஜெயலலிதா பிடிவாதம் பிடித்தால், 3 பிளஸ் 4 என்ற அளவில் பா.ஜ.கவும்பா.ம.கவும் இடங்களைப் பிரிக்க வேண்டி வரும். அப்படிப்பட்ட நிலை வந்தால் பா.ஜ.கவுக்கு கும்பிடுபோட்டுவிட்டு திமுக கூட்டணிக்கு ராமதாஸ் பச்சைக் கொடி காட்டுவார் என்று தெரிகிறது.
இது தவிர 96ம் ஆண்டு தேர்தல் பயமும் ராமதாஸ் மனதில் இருந்து மறையவே இல்லை. அந்தத் தேர்தலில்பா.ம.கவையும், ஜனதா கட்சியின் சுப்பிரமணியம் சுவாமியையும் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கைவிட்டன.அந்தத் தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.கவுக்கு 14ல் டெபாசிட் கூட தேறவில்லை.
இந் நிலையில் திமுக கூட்டணி குறித்து ஜனவரி இறுதிக்குள் முடிவை அறிவிக்கப் போவதாகவும், பொங்கலுக்குள்ஒரு பதிலைத் தருமாறும் ராமதாசுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார் கருணாநிதி.
இரு பெரிய கட்சிகளும் தன்னை வளைக்க முயன்று வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நிற்கிறார் ராமதாஸ்.
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாகவே எடைபோட்டுக் கொண்டு ஓவராய்பேசி வந்த பா.ஜ.கவினர் இப்போது நம்பி இருப்பது டெல்லி தலைவர்களைத் தான். காரணம், மாநிலத்தலைவர்களுடன் பேசுவதற்குக் கூட போயஸ் தோட்டம் முன் வரவில்லை.
இதனால், அத்வானியே சரணம் என டெல்லியை நோக்கி விரதம் இருக்கத் தொடங்கியுள்ளது பா.ஜ.க. ஒருவேளைஅத்வானி பேசி ஜெயலலிதாவை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டாலும், அதை பிரதமர் வாஜ்பாய்விரும்புவாரா என்று தெரியவில்லை.
வெறும் 3 எம்.பி. சீட்களுக்காக ஜெயலலிதாவின் காலில் போய் விழ வேண்டியதில்லை என்று கூறி அத்வானிகோஷ்டிக்கு வாஜ்பாய் முட்டுக் கட்டை போடவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தலில் வாஜ்பாய் முகத்தைக்காட்டியே ஓட்டு வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளதால் அவருக்கு மனச் சங்கடம் நேராமல் அத்வானிகோஷ்டியும் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.