மகாராஷ்டிரத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல்
மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்- சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க- சிவசேனைக்கூட்டணிக்கும் இடையே மிகக் கடும் போட்டி நிலவுகிறது.
இதுவரை பல்வேறு தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ்-தேசியவாதகாங்கிரஸ் கூட்டணி மிக மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இதனால் அங்கு யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் உருவாகக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இரு கூட்டணிகளிலும் அதிருப்தியாளர்கள் பெருமளவில் போட்டியிடுவதால் கட்சிகளின் வெற்றி தோல்வியைத்தீர்மானிப்பதில் அவர்களே பெரும் பங்கு வகிப்பர் என்றும் தெரிகிறது.
5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசுக்கு எதிரான அலை இருந்தாலும் அதை தங்களுக்கு ஆதரவானவாக்குகளாக மாற்ற பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணி தவறிவிட்டதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சிவசேனையில் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேவுக்கும், அக்காள் மகன் ராஜ் தாக்கரேவுக்கும் இடையேநடந்து வரும் கோஷ்டிப் பூசல் காரணமாக அக் கட்சி வலுவிழந்துள்ளது. உத்தவின் ஆட்களுக்கே பெரும்பாலானசீட்கள் ஒதுக்கப்பட்டதால், ராஜ் தாக்கரேயின் ஆட்கள் அதிருப்தியாளர்களாக களத்தில் நிற்கின்றனர்.
இந்த கோஷ்டிப் பூசல் காரணமாக பெரும்பாலும் பிரச்சாரத்துக்குச் செல்வதையே பால் தாக்கரே தவிர்த்துவிட்டார்.
இதே போல காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் சரத்பவாரின் கட்சியினர் அதிருப்தியாளர்களாக நிற்கின்றனர்.பவார் கட்சி போட்டியிடும் இடங்களில் காங்கிரசார் போட்டியில் குதித்துள்ளனர்.
இதனால் இரு கூட்டணிகளிலும் வாக்குகள் சிதறும் சூழல் உருவாகியுள்ளது. 288 பேர் கொண்ட சட்டசபைக்குசுமார் 2,000 பேர் போட்டியில் உள்ளனர். இவர்களில் சுமார் 600 பேர் முக்கிய கட்சிகளின் அதிருப்தியாளர்கள்.
இவர்களைத் தவிர மகாராஷ்டிரத்தில் பெருவாரியாக வசிக்கும் தலித் வாக்குகளைக் குறி வைத்து மாயாவதியின்பகுஜன் சமாஜ் கட்சியும், மகாராஷ்டிரத்தின் முக்கிய நகர்களில் பிழைப்பு தேடி குவிந்துள்ள பிகார், உத்தரப் பிரதேசயாதவ இன மக்களின் வாக்குகளைக் குறி வைத்து முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் தலா 272 மற்றும்95 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இவர்களைத் தவிர டாக்டர் அம்பேத்கர் பெயரைச் சொல்லி ஏகப்பட்ட குடியரசுக் கட்சிகளின் பிரிவுகளும்தனித்னியாகப் போட்டியிடுகின்றன. இதனால் தலித் ஓட்டுக்கள் சிதறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
போலி முத்திரைத் தாள் விவகாரம், வீர சாவர்க்கர் விவகாரம் ஆகியவற்றை பா.ஜ.க. கையில் எடுத்து பிரச்சாரம்செய்தது. ஆனால், அதற்கு மக்களிடையே ஆதரவு கிடைக்கவில்லை. சாவர்க்கர் விவகாரத்தை வைத்து உமா பாரதிநடத்திய யாத்திரையும் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.
இதையடுத்து ரோடு, தண்ணீர், மின்சாரம் என அடிப்படைப் பிரச்சனைகள் பக்கம் தனது கவனத்தைச் செலுத்திபிரச்சாரத்தில் இறங்கியது பா.ஜ.க. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
இதைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனஅறிவித்தது காங்கிரஸ்.
தொழில் நகரம் என்ற பெயரை மும்பைக்கு மீண்டும் பெற்றுத் தருவோம், மும்பையை சர்வதேச நகராக்குவோம்என்ற பிரச்சாரத்தை முன் வைத்தது சிவசேனை.
மேலும் தாங்கள் தென் இந்தியர்களுக்கோ, வட இந்தியாவில் இருந்து பிழைப்பு தேடி மும்பை வந்தவர்களுக்கோஎதிரானவர்கள் அல்ல என்றும் சிவசேனை பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், பிரச்சாரத்துக்காக மும்பை வந்தரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சமீபத்தில் பிகார் மாநிலத்தினர் மீது சிவசேனை கட்சியினர் நடத்தியதாக்குதலை நினைவுபடுத்திவிட்டு காங்கிரசுக்கு ஓட்டு கேட்டுவிட்டுப் போனார்.
பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தீவிரமாக பிரச்சாரம் செய்யவில்லை. மூட்டு வலி காரணமாக அவர்பிரச்சாரத்தை தவிர்த்துவிட்டார். இதே போல முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியும் பிரச்சாரத்தில்அவ்வளவாக ஈடுபடவில்லை.
இதனால் அக் கட்சியின் பிரச்சாரத்தை பிரமோத் மகாஜன், சுஷ்மா சுவராஜ் ஆகியோரே முன்னின்று நடத்தினர்.
நேற்றுடன் இந்த பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப் பதிவு நடக்கிறது. இரு முக்கியகூட்டணிகளுமே சம பலத்தில் இருக்கும் நிலையில் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கப் போவது அதிருப்தியாளர்களும்சுயேச்சைகளுமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications