2வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா வெல்லுமா?
சென்னை:
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று காலைசென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்போட்டி பெங்களூரில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அபார வெற்றியைப் பெற்றது.
இந் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கும்,பேட்ஸ்மென்களுக்கும் சாதகமான பிட்ச் ஆக கருதப்படும் சேப்பாக்கம் மைதானம், ரசிகர்களுக்கு நல்ல விருந்தைஅளிக்க காத்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது.இதில் இந்தியா 2 முறையும், ஆஸ்திரேலியா ஒரு முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது.இன்னொரு போட்டி டை ஆகியுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டி ஒன்று டை ஆனது இங்குமட்டுமே.
பேட்டிங்குக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில், 1984ம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து எடுத்த 7விக்கெட் இழப்புக்கு 652 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 1976ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகஇந்தியா 83 ரன்கள் எடுத்ததே குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.
சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 39 செஞ்சுரிகள் போடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இந்தியா 20செஞ்சுரிகளைப் போட்டுள்ளது. குறைந்தபட்சமாக இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் தலா 2செஞ்சுரிகளை இங்கு பதிவுசெய்துள்ளன. ஆஸ்திரேலியா வீரர்கள் சார்பில் 7 செஞ்சுரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சேப்பாக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 2 இந்திய வீரர்கள் மட்டுமேசெஞ்சுரி அடித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரும், கபில்தேவுமே அவர்கள்.
கடந்த முறை இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த மேத்யூ ஹைடன், சேப்பாக்கத்தில்நடந்த டெஸ்ட் போட்டியில் 203 ரன்களை அடித்திருந்தார். இந்த முறையும் அவர் சாதனை படைக்கலாம்.
தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட்போட்டிகள் மூலம் 774 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக கவாஸ்கர் 1018 ரன்களைக் குவித்துள்ளார்.கபில்தேவ் 708 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக ஹர்பஜன் சிங் திகழ்கிறார். 2001ல்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இதேபோல,ஹிர்வானியும் ஒரே போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் தலா 8 விக்கெட்டுகள் எடுத்து சாதனைபடைத்துள்ளார்.
11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகள் வீழ்த்திய கபில்தேவ்தான் சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்சவிக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளார். கும்ப்ளே 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெண்டுல்கருக்கு மிகவும் ராசியான மைதானமாக கருதப்படும் சேப்பாக்கம் இன்று டெண்டுல்கர் இல்லாத இந்தியஅணியின் ஆட்டத்தைக் காணவுள்ளது. இதனால் விறுவிறுப்பு குறைவாக இருக்கும் என்றாலும், இந்த டெஸ்ட்போட்டியை எப்படியும் வென்றாக வேண்டும் என்ற துடிப்பில் இந்திய அணி இருப்பதால் ரசிகர்களுக்கு நல்லவிருந்து கிடைக்கும் என்று நம்பலாம்.