நாடாளுமன்றத்தில் அமளி-துமளி
டெல்லி:
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட விவகாரம் இன்று மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வெடித்தது.
கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக பா.ஜ.கவினர் குரல் எழுப்ப பதிலுக்கு அதிமுக,கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் பெரும் அமளி, துமளி நிலவியது.
மக்களாவையில் இந்த விவகாரத்தை பா.ஜ.க. இன்று எழுப்பியது. அப்போது பேசிய பா.ஜ.க எம்பி மல்ஹோத்ரா ஜெயேந்திரரை தமிழகஅரசு கேவலப்படுத்தி வருகிறது. அவருக்கு எதிராக பொய்யான சாட்சிகளை உருவாக்கி வருகிறது. பலரையும் துன்புறுத்தி பொய்வாக்குமூலங்கள் பெற்று வருகிறது.
இதில் மத்திய அரசு அமைதி காத்து வருவது நல்லதல்ல என்றார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தக் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.ஆனாலும், ஜெயேந்திரரின் உடல் நிலையைக் கருத்திக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதினார்.
இந்த விஷயம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்ய பா.ஜ.க. அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில்நாடாளுமன்றத்தில் ஏதும் செய்ய முடியாது என்றார்.
இந்தக் கைதில் மத்திய அரசுக்கும் தொடர்பிருப்பதாக பா.ஜ.க எம்பிக்கள் குற்றம் சாட்டினர். அப்போது பேசிய நாடாளுமன்றவிவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரி,
இந்தக் கைதுக்கும் மத்திய அரசுக்கும் துளியும் சம்பந்தமில்லை. கைது குறித்து மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் தகவல் ஏதும்தெரிவில்லை. தமிழக போலீசார் கைது செய்ய வந்துள்ளதாக அவர் பிரதமரிடமோ அல்லது வேறு யாரிடமும் கூறவில்லை. அதற்கானஅவசியமும் இல்லை.
இந்த விஷயத்தில் பா.ஜ.க தவறான பிரச்சாரம் செய்கிறது என்றார்.
அப்போது காங்கிரஸ் எம்பிக்களுக்கும் பா.ஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பல உறுப்பினர்கள் தவறாகப்பேசியதால் அவற்றையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் முகம்மத் சலீம், ஜெயேந்திரரின் கைதை வைத்து பா.ஜ.க. அரசியல் லாபம் அடிக்கப்பார்ப்பது மிக மட்டமான செயல். மாநில அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒரு கைது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதேமுறையற்றது என்றார்.
அவருக்கெதிரான பா.ஜ.க எம்பிக்கள் கோஷமிட கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவாகக் குரல் எழுப்பினர். யார் என்னசொல்கிறார்கள் என்பதே புரியாத அளவுக்கு கூச்சல்-குழப்பம் நிலவியது.
அப்போது பேசிய பாஜக எம்பிக்கள், சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்தது தவறு. அவரை தனி வீட்டிலாவது வைத்திருக்கலாம்என்றனர். ஆனால், இதற்கு பதில் தந்த திமுக உறுப்பினர்கள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான். இதனால் யாருக்கும் சிறப்புசலுகையெல்லாம் காட்டத் தேவையில்லை என்றனர்.
மாநிலங்களவையில் இந்த விவகாரத்தைக் கிளப்பிய பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ், ஜெயேந்திரரின் கைது இந்து மதத்தின் மீதானதாக்குதல்.
சிறையில் பூஜை செய்யக் கூட அவருக்கு வசதி செய்து தர மறுக்கிறார்கள். அவர் வைக்கப்பட்டிருக்கும் சிறை அறை மிக மிக மோசமானதாகஉள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன். அவரை தனி வீட்டில் வைத்திருக்கலாம். சிறையில் ஏன் அடைத்தார்கள் என்றார்.
இதற்கு பதில் தந்த அதிமுக எம்.பி பிஜி. நாராயணன், அவையில் சுஷ்மா சுவராஜ் தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்.சங்கராச்சாரியாருக்கு அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. இதை அவரே நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறார்.
மாநில அரசு தனது கடமையைத் தானே செய்தது. ஆனால், இந்த வழக்கையே வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு அத்வானி போன்றவர்கள்சொல்வது ஏன்?. இந்த விவகாரம் எங்கள் மாநில சட்டம்-ஒழுங்கு தொடர்பானது என்றார்.
அப்போது அவருக்கு எதிராக பா.ஜ.க, சிவசேனை ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுக, ஆர்.ஜே.டி,கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோஷமிட இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications