பெரிய பள்ளங்களில் மொத்தமாய் புதைக்கப்படும் உடல்கள்
சென்னை:
கடலூர், கன்னியாகுமரி, நாகை மாவட்டங்களில் கடலின் சீற்றத்துக்குப் பலியானவர்களின் உடல்கள் பெரிய குழிகள் வெட்டப்பட்டு மொத்தமாக புதைக்கப்பட்டன.
கடலூரில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 600யைத் தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
இங்கு மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் அடையாளம் காட்டியதும் அவர்களது கையெழுத்துப் பெறப்பட்டது.
இதையடுத்து பெண்ணாற்றங்கரையில் புல்டோசர்கள் உதவியுடன் மிகப் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. மருத்துவமனைகளில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட 136 உடல்கள் மொத்தமாக அதில் அடுக்கப்பட்டன.
அப்போது பெண்கள் தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலறித் துடித்தனர். பின்னர் சிறிய பிரார்த்தனைப் பின் மண் போட்டு அந்தப் பள்ளம் மூடப்பட்டது.
இதே போல பரங்கிப் பேட்டையில் 111 பேரின் உடல்களும் கிள்ளை பகுதியில் 41 உடல்களும் இவ்வாறு மொத்தமாகப் புதைக்கப்பட்டன.
அதே போல நாகை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கன்னியாகுமரியில் குளச்சல் பகுதியிலும் பெரும் பள்ளங்கள் தோண்டப்பட்டு நூறுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.
சிதம்பரம்: 1,000 பேர் எங்கே?
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பெரும் அலைகள் நுழைந்ததில் 3 கிராமங்கள் அடியோடு நீரில் மூழ்கியுள்ளன.
எம்ஜிஆர் திட்டு, முடசல் ஓடை, சின்ன வாய்க்கால் ஆகிய கிராமங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இங்கு வசித்த சுமார் 1,000 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
அவர்களை கடல் கபளீகரம் செய்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
தஞ்சை: 1200 மீனவர்கள் கதி?
இதே போல நேற்று மீன்பிடிக்கச் சென்ற தஞ்சை மாவட்ட மீனவர்கள் சுமார் 1,200 பேர் இதுவரை கரை வந்து சேரவில்லை.
மல்லிப்பட்டினம், கள்ளி வயல், மரக்காவலசை போன்ற பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் சுமார் 200 பைபர் கிளாஸ் படகுகளிலும் நாட்டுப் படகுகளிலும் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கரை திரும்பததால் அப் பகுதியில் பெரும் கலக்கம் நிலவுகிறது. அவர்களது குடும்பத்தார் கடலை நோக்கிய வண்ணம் கதறியழுவதைக் காண சகிக்க முடியாமல் நிருபர்களும் அழும் நிலை ஏற்பட்டது.