இலங்கை வானொலி விஷம பிரச்சாரம்: புலிகள் கண்டனம்
கிளிநொச்சி:
சுனாமி தாக்குதலில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பலியாகிவிட்டார் அல்லது காணாமல் போய்விட்டார் என இலங்கை அரசுவானொலி பொய்ச் செய்தி பரப்பி வருவதாக விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடற்படைத் துணைத் தளபதி தயா சந்தகிரியை மேற்கோள் காட்டி விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பலியாகிவிட்டார் அல்லது காணாமல் போய்விட்டார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேட முயலும் தரப்புகள் வழங்கும்தகவல்களை வைத்து விஷமத்தனமான செய்திகளை ஒலிபரப்பும் கீழ் நிலைக்கு இலங்கை வானொலி இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது.
பேரழிவு நிகழ்ந்துள்ள நேரத்தில் மக்களிடம் குழப்பம் விளைவிக்கும் வதந்திகளைப் பரப்பும் பணியில் அரசின் செய்தி ஊடகம் ஈடுபடுவதுவருந்தத்தக்கது. செய்தி, ஊடக தர்மத்துக்கு விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
கோபி அன்னான் வருகை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான் பயணம் செய்தார்.
கொழும்பில் பிரதமர் மகிந்தாவையும் உலக வங்கித் தலைவர் ஜேம்ஸ் வொல்பென்சோனையும் சந்தித்துப் பேசிய அவர் பின்னர் தென்பகுதியில் சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.
தமிழர்கள் கோரிக்கை:
ஐநா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அன்னான் இலங்கையின் புனரமைப்புப் பணிகளுக்கு எந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபைஉதவ முடியும் என்பது குறித்து விவாதிக்கவுள்ளார்.
சுனாமியால் வட கிழக்குப் பகுதி தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதிகளையும் அன்னான் பார்வையிடவேண்டும் என பல்வேறு அமைப்புகளும், தமிழர்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் பகுதிக்கு டென்மார்க் உதவி:
இதற்கிடையே திரிகோணமலை பகுதியில் நீரை சுத்தப்படுத்த உதவும் 10 கருவிகளை டென்மார்க் வழங்கியுள்ளது. தமிழர் மறுவாழ்வுஅமைப்பிடம் இந்தக் கருவிகளை டென்மார்க் தூதர் மைக்கேல் ஸ்டென்ர்பெர்க் வழங்கினார்.
புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுனாமி பாதிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார்.
அமைதிப் பேச்சு: பாவல்
இதற்கிடையே இலங்கைக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்,
இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் தான் 1,500 படைகளை அனுப்பியுள்ளோம். புலிகள், இலங்கை அரசுக்கு இடையிலானஅமைதிப் பேச்சுவார்த்தையில் நாங்கள் தலையிடப் போவதில்லை. நார்வே உதவியுடன் அவர்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும்.
சுனாமி தாக்குதலையடுத்து இலங்கையின் அனைத்துப் பிரிவினரும் ஒரே குடையின் கீழ் வருவார்கள் என்று நம்புகிறோம்.
சுனாமி நிவாரணப் பணிகள் தொடர்பாக புலிகளுடன் நாங்கள் நேரடியாக பேசவில்லை. வட கிழக்குப் பகுதிக்கும் நிவாரணம்அனுப்பப்படுவதாக அதிபர் சந்திரிகா தெரிவித்தார் என்றார் பாவல்.