சுதர்சனத்தின் மனைவிக்கு ஜெ. ஆறுதல்
கும்மிடிப்பூண்டி:
கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனத்தின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, சுதர்சனத்தின்மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் நேற்று அதிகாலை கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் சதீஷ்குமார் படுகாயமடைந்தார். அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் ஜெயலலிதா இன்று மதியம் 1.30 மணிவாக்கில் ஹெலிகாப்டர் மூலம் சோழவரம் சென்றார். அங்கிருந்து தானாக்குளத்தில்உள்ள சுதர்சனத்தின் வீட்டுக்குக் காரில் சென்றார்.
அங்கு சுதர்சனத்தின் மனைவி, குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சென்ற அவர் சமீபத்தில்மரணமடைந்த அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.திருநாவுக்கரசு வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்குஆறுதல் தெரிவித்தார்.பின்னர் சென்னை திரும்பினார்.
இதற்கிடையே, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுதர்சனத்தின் மகன் சதீஷ்குமாருக்கு இன்று தாடையில் பிளாஸ்டிக் சர்ஜரிமேற்கொள்ளப்பட்டது.
சுதர்சனத்தை கொன்றது பீகார் கொள்ளையர்கள்?
இந் நிலையில் சுதர்சனத்தைக் சுட்டுக் கொன்று அவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரியவந்துள்ளது.
இவர்களைப் பிடிக்க 5 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் கலர்பவுடர் பூசி வந்திருந்தனர். இதே ரீதியில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களை ஆராய்ந்த தனிப்படையினர், சுதர்சனத்தைக் கொலைசெய்தது பீகாரைச் சேர்ந்த பார்த்தீ என்பவன் தலைமையிலான கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
சேலத்தில் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராசன் கொலை, திருவேற்காட்டில் திமுக பிரமுகர் கஜேந்தரா கொலை, கிருஷ்ணகிரியில் துணிவியாபாரி கொலை ஆகியவற்றில் இவர்களுக்குத் தொடர்பிருப்பது கைரேகைத் தடயங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கொள்ளையைத் தடுப்பவர்களைக் கொலை செய்ய இந்தக் கும்பல் தயங்குவதில்லை. ஒரு இடத்தில் கொள்ளை அடித்தபின்பு மீண்டும் அந்தஇடத்திற்கு இவர்கள் வருவதில்லை. இதுவரை தமிழகத்தில் 14 கொலை-கொள்ளைகளை இந்தக் கும்பல் நடத்தியுள்ளது.
இந் நிலையில் இன்று அதிகாலை கிருஷ்ணகிரி அருகே பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் வீட்டில் சில மர்ம மனிதர்கள் துப்பாக்கியுடன்கொள்ளையடிக்க முயன்றனர். போலீஸார் விரைந்து வந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் சுதர்சனத்தைக் கொன்றவர்களாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டஎல்லைகளில் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பார்த்தீ கும்பலை பிடிக்க பீகாருக்கு ஒரு தனிப்படையை அனுப்பவும் காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.