ஜெவுக்கு இது தான் கடைசி பட்ஜெட்: எதிர்க்கட்சிகள்
சென்னை :
தேர்தலை மனதில் வைத்துத்தான் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்றுஎதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நிதியமைச்சர் பொன்னையன் நேற்று தமிழக சட்டசபையில் 2005-2006 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்த பட்ஜெட்டை முதல்வர் ஜெயலலிதா மக்கள் பட்ஜெட் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆனால் இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
திமுக:
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,
இது வரியில்லாத பட்ஜெட் என்று அமைச்சர் கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். மறைமுகமாக சிலபொருட்களுக்கு 4 முதல் 12 சதவீதம் வரை வரியை அதிகரித்து விட்டு வரியற்ற பட்ஜெட் என்கிறார்கள்.
வேலை நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவழங்குவது குறித்தும் பட்ஜெட்டில் எதுவும் குறிப்படப்படவில்லை. மொத்தத்தில் இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட்என்றார்.
பா.ம.க:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி கூறுகையில்,
பட்ஜெட் புத்தகம் பெரியதாக உள்ளது. பக்கங்களும் அதிகமாக உள்ளன. ஆனால் அதில் குறிப்பிடத்தக்க அம்சம்எதுவுமே இல்லை. இந்த ஆட்சியாளர்களுக்கு இது தான் கடைசி பட்ஜெட்.
அதில் இருக்கும் வாசகங்களைப் பார்த்தால் தேர்தல் பயத்தில் பிதற்றியிருப்பது தெளிவாக தெரிகிறது. வரவிருக்கும்தேர்தலில் நமது நிலை என்ன ஆகுமோ என்ற பயத்தில் வரியில்லாத பட்ஜெட் என்று கூறி ஒரு மாயைஏற்படுத்தியிருக்கிறார்கள். மொத்தத்தில் இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட்.
மதிமுக:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், சென்னை நகருக்கு ஏதோ சாதனை செய்துவிட்டதைப் போலநிதியமைச்சர் கூறியிருக்கிறார். உண்மையில் சென்னை நகர மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகிக்கொண்டிருக்கிறது.
சாலையில் 15 லட்சம் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் பயங்கரமான விபத்துக்கள் நடக்கின்றன.குறுகி வருகிற சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளைஉருவாக்குவதற்கான அறிவிப்புகள் எதுவும் நிதி நிலை அறிக்கையில் இல்லை.
பற்றாக்குறை எப்படி சரி செய்யப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. தேர்தல் நெருங்கி வருவதால் புதிய அரசின்தலையில் பொறுப்பை கட்டும் விதத்தில் நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் கூறுகையில், அடிப்படை தேவைகளைப்பற்றிகவலைப்படாமல் இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளனர். தேர்தலை முன் வைத்து ஒரு ஸ்டண்ட் அடித்திருக்கிறார்கள்என்றார்.
காங்கிரஸ்:
காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறுகையில்,
தேர்தலில் வாக்கு பெறுவதை மனதில் வைத்து இது தயாரிக்கப்பபபட்டுள்ளது.
வரியில்லாத பட்ஜெட் என்று கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சியில்ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. எனவே தான் இந்தப் பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்களே இல்லை.
ஏழை, எளிய மக்களை கை தூக்கிவிட எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மூடப்பட்ட ஆலைகளைதிறப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சட்டசபையில் திமுக வும் நாங்களும் இணைந்து செயல்படுவோம்.எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட்:
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஜி. பழனிச்சாமி கூறுகையில், ஏதோ மகாபாரத கதையை படிப்பது போல நிதிஅமைச்சர் நீண்ட நேரம் பட்ஜெட்டை படித்து முடித்தார். ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. சாலை வசதி, குடிநீர்வசதி என்று கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் அரசாங்கத்தின் வழக்கமான பணிகள் தான்.
மத்திய அரசுடன் மாநில அரசு முரண்பட்டு நிற்பது தெரிகிறது. சேது சமுத்திர திட்டம், கடல்நீரை குடிநீராக்கும்திட்டம் ஆகியவற்றில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தப்பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார்கள் என்றார்.