3வது அணி: ராமதாஸுக்கு திருமாவளவன் அழைப்பு
சேலம்:
டாக்டர் ராமதாஸ் நினைத்தால் 3வது அணி மிகப் பெரிய எழுச்சியுடன் உருவாகும். அதற்கு ராமதாஸ் முன் வர வேண்டும் என்றுவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், அதிமுகவையும், திமுகவையும் சம தூரத்தில் வைத்துள்ளோம்.இரண்டில் எந்தக் கட்சி கூப்பிட்டாலும் அதை ஏற்றுக் கொள்வோம். யாருடைய அழைப்பையும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை 3வது அணி என்பது சாத்தியமில்லாத விஷயம் கிடையாது. பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இணைந்து முயற்சித்தால் நிச்சயம் 3வது அணி உருவாகும். இவர்கள் முயற்சி எடுத்தால்தான் அது சாத்தியமாகும்.
இப்போதைய கால கட்டத்தில் ராமதாஸ் அந்த முயற்சியை எடுத்தால் மிகப் பெரிய எழுச்சியை அது உருவாக்கும். அதை செய்யவேண்டும் என்று டாக்டர் ராமதாஸை நான் கேட்டுக் கொள்கிறேன்.
நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதை, தனிக் கட்சி தொடங்குவதை நான் வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
தற்போது தமிழ் பாதுகாப்பு இயக்கம் மண்டல அளவில் உள்ளது. விரைவில் மாவட்ட அளவில் விஸ்தரிக்கப் போகிறோம்.எங்களது அமைப்பின் சார்பாக 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம்.
வருகிற 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை மற்றும் விளம்பரப் பலகைகளில் தமிழ்மொழிக்கு முதன்மை இடம் அளிக்க வலியுறுத்தி, பிற மொழிச் சொற்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
ஏற்கனவே தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. அதை அமல்படுத்த வேண்டும் என்று தான்நாங்கள் கோருகிறோம். சென்னையில் நடக்கும் போராட்டத்தில் நான், டாக்டர் ராமதாஸ், டாக்டர் சேதுராமன், ஆடிட்டர்பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இறுதிக் கட்டமாக நவம்பர் 1ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டமாகவும், சிறை நிரப்பும் போராட்டமாகவும் நடத்தப்படுகிறது. 10,000தமிழறிஞர்கள் உள்பட 1 லட்சம் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications