அதிமுகவை வாழ வைத்த பெண்களின் ஓட்டு
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுகவுக்கு பெண்கள் வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெண்களுக்கு சேலை, பணத்தைத் தந்து இந்த ஓட்டுக்களை அதிமுகவளைத்ததாக திமுக கூட்டணி குற்றம் சாட்டுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததால் காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இடையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மையான இடங்களில் வெற்றிகிடைத்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் என்பதால் அதை திமுக உள்ளிட்ட கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந் நிலையில் இரு தொகுதிகளிலும் வென்றுள்ளது அதிமுக. அதிமுகவினர் வீடு, வீடாக காசு கொடுத்தே இந்த வெற்றியைப்பெற்றுள்ளனர் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் புகார் கூறுகின்றன.
இடைத் தேர்தலில் விழுந்த வாக்குகளை ஆராய்ந்தால், வழக்கம்போல் அதிமுகவை பெண்கள் வாக்குகள் தான்கரையேற்றிவிட்டுள்ளது உறுதியாகிறது.
இரு தொகுதிகளிலும் பெண்களுக்கான வாக்குச் சாவடிகளில் அதிமுகவுக்குகே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
வன்னியர் பகுதிகளிலும் ஆதரவு:
காஞ்சிபுரத்தில் பெண்களுக்காக 34 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 30 வாக்குச் சாவடிகளில் அதிமுகவுக்கேஅதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 34 வாக்குச் சாவடிகளிலும் மொத்தமுள்ள 18,932 வாக்குளில் 10,798 வாக்குகள்அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் திமுக கூட்டணிக்கு 6.989 வாக்குகளே கிடைத்தன. அதிமுகவுக்கு 57.03 சதவீத வாக்குகளும், திமுககூட்டணிக்கு 36.9 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. இதிலிருந்து அதிமுகவுக்கு பெண்களின் ஆதரவு அமோகமாகஇருந்துள்ளது தெரிகிறது.
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் முசரவாக்கம், காவாந்தண்டலம், பெரும்பாக்கம் பகுதி பெண்கள் வாக்குச் சாவடிகளில் கூடஅதிமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
பெரும்பாக்கத்தில் 658 வாக்குகளில் 350 வாக்குகளும், காவாந்தண்டலத்தில் 621 வாக்குகளில் 330 வாக்குகளும்,முசரவாக்கத்தில் 668 வாக்குகளில் 410 வாக்குளும் அதிமுகவுக்கு கிடைத்துள்ளன. இதே போல இந்தப் பகுதியிலுள்ள பொதுவாக்குச்சாவடிகளிலும் அதிமுகவுக்கே அதிக வாக்குள் கிடைத்துள்ளன.
முசரவாக்கத்தில் 3,150 வாக்குகளில் 1661 வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துள்ளன. ஆவலூர் மையத்தில் 1,541 வாக்குகளில்,841 வாக்குகளும், ஆரப்பாக்கத்தில் 1,294 வாக்குகளில் 665 வாக்குகளையும், காவாந்தண்டலத்தில் 1275 வாக்குகளில் 642வாக்குளும் அதிமுகவுக்கு கிடைத்துள்ளன.
காஞ்சிபுரம் நகரம் தவிர இந்தப் பகுதி முழுவதும் வன்னியர்கள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளில் 50சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.
கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் பெண்களின் வாக்குகள் அதிமுகவுக்கே அதிகமாக கிடைத்துள்ளது.
மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது உள்ளிட்ட ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழைத்து வரப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலமாக பணத்தை வீடு, வீடாக பெண்களைச் சந்தித்துக் கொடுக்க வைத்தே இந்த வெற்றியைஅதிமுக பெற்றதாக திமுக கூறுகிறது.