யாத்ரீகர்கள் ஆத்திரம்-ஹஜ் அலுவலகம் சூறை
துபாய்:குடிநீர், போக்குவரத்துக்கு சரியான வசதிகள் செய்து தராததால் ஆத்திரமடைந்த இந்திய ஹஜ் பயணிகள்,மெக்காவில் உள்ள இந்திய ஹஜ் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பயணிகள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.இவர்களுக்கு மெக்கா மற்றும் மெதீனாவில் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தங்குமிட வசதி இரு பிரிவாக பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் வகை தங்குமிட வசதியைகோரியவர்களுக்கு (இதற்கு அதிக பணம் தர வேண்டும்) மெக்காவில் உள்ள மசூதியிலிருந்து 600 மீட்டர்சுற்றளவுக்குள் தங்குமிட வசதி செய்து தரப்பட வேண்டும்.
18,000 இந்திய யாத்ரீகர்கள் முதல் வகை தங்குமிட வசதியைக் கோரியிருந்தனர். ஆனால் இவர்களுக்கு 600மீட்டர் தொலைவுக்குள் தங்குமிட வசதி அளிக்கப்படவில்லை. மாறாக 3 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள்தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் அங்கிருந்து மசூதிக்குச் சென்று திரும்ப சரியான போக்குவரத்து வசதியும் செய்யப்படவில்லை என்றுகூறப்படுகிறது. இதுதவிர தங்குமிடம் வசதியாக இல்லை எனவும், குடிநீர் சரியாக கிடைப்பதில்லை எனவும்தெரிகிறது.
இதையடுத்து மெக்காவில் உள்ள இந்திய ஹஜ் அலுவலகத்திற்கு 2000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் திரண்டு வந்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிமோதல் மூண்டது.
அலுவலகத்திற்குள் புகுந்த யாத்ரீகர்கள் அதை சூறையாடினர். அலுவலகப் பொருட்களை உடைத்து நொறுக்கினர்.இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு இந்திய பயணிகளை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
அதிக அளவில் பணம் கொடுத்தும் தங்களை மாட்டுக் கொட்டகை போன்ற இடத்தில் தங்க வைத்து இந்தியஅதிகாரிகள் மன வேதனைக்குட்படுத்தி விட்டதாக இந்திய யாத்ரீகர்கள் குமுறியுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய ஹஜ் குழு தூதரான டாக்டர் சுஹேல் அஜஸ் கான் கூறுகையில், பெரிய மசூதிக்கு அருகேகட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தங்குமிட நெருக்கடி ஏற்பட்டது. இதனால்தான் முதல் வகைதங்குமிட வசதி கோரியிருந்தவர்களை அங்கு முழுமையாக தங்க வைக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து அனைவரும் மஹாபாஸ் அல் ஜின் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் 2வது வகைதங்குமிட வசதி கோரியிருந்த 10,000 பேர் அஸிஸியா என்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதல் வகை தங்குமிட வசதி கிடைக்காதவர்களுக்கு இந்தியா திரும்பிய பின்னர் அவர்களிடமிருந்து பெறப்பட்டபணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என்றார்.