வக்கீல்களுக்கு எதிராக திரளும் போலீஸ் குடும்பங்கள்
சென்னை:
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புகுந்து தலைமைக் காவலரைத் தாக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சர்ச்சையில் சிக்கியுள்ள தலைமைக் காவலர் நடராஜனின் மனைவி தலைமையில் போலீஸாரின் மனைவிமார்கள் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் வக்கீல்களுக்கும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கு இருந்த காவலர்களுக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான சர்ச்சை விஸ்வரூபமெடுத்து வருகிறது.
அந்த சமயத்தில் பணியில் இருந்த ஏட்டு நடேசன் என்பவர் வக்கீல்களைத் தாக்கியதாக கூறி அவரை சஸ்பெண்ட் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த நிலையில் ஏட்டு நடேசனுக்கு ஆதரவாக காவலர்களின் குடும்பத்தினர் திரண்டுள்ளனர். நேற்று ஏட்டு நடேசனின் மனைவி செல்லத் தங்கம் தலைமையில் பெரும் திரளான காவலர்களின் மனைவிமார்கள் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு ஆணையரை சந்தித்து வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது கணவர்மார்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மனுவில், கடந்த 1ம் தேதி இரவு 10 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்ற இரண்டு வக்கீல்கள், ஏட்டு நடேசனை சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளனர். அவரது கையையும் கடித்துள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் அடித்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக நடேசன் மீது பழியைப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏட்டு நடேசனுக்கு 50 வயதுக்கு மேலாகிறது. அவருக்கு ஹெர்ணியா ஆபரேஷன் நடந்துள்ளது. அவரால் யாரையும் அடிக்க முடியாது. இந்த நிலையில் வக்கீல்கள் கூறும் புகார் பொருத்தமானதாக இல்லை.
ஏட்டு நடேசனைத் தாக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தனர்.
இதற்கிடையே, ஏட்டு நடேசன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு எந்தப் பணியிடமும் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications