பெனாசிர் ஊர்வலத்தில் குண்டுவெடிப்பு - 125 பேர் பலி
கராச்சி:
கராச்சியில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கலந்து கொண்ட ஊர்வலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் 125 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதனால் கராச்சி முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.
8 ஆண்டு கால வெளிநாட்டு வாசத்திற்குப் பின்னர் நேற்று பிற்பகல் பெனாசிர் பூட்டோ நாடு திரும்பினார். கராச்சிக்கு வந்து சேர்ந்த அவரை லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.
தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி திறந்த பேருந்தில் கட்சி நிர்வாகிகளுடன் பூட்டோ, ஜின்னாவின் சமாதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கராச்சி விமான நிலையத்திலிருந்து ஜின்னாவின் சமாதி உள்ள இடம் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆனால் தொண்டர்கள் லட்சக்கணக்கில் இருந்ததால் ஊர்வலம் நத்தை வேகத்தில் நகர்ந்தது. 9 மணி நேரமாக நடந்த இந்த ஊர்வலத்தால் கராச்சி நகரே திணறியது.
இந்த நிலையில், ஜின்னாவின் நினைவிடத்தை பூட்டோ நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென பலத்த சப்தத்துடன் அடுத்தடுத்து இரண்டு முறை குண்டுகள் வெடித்தன. இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். குண்டுவெடிப்பில் சிக்கி பலர் உயிரிழந்தனர். சிதறிய உடல்களும், கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் உடல்களுமாக அப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.
துண்டிக்கப்பட்ட கால்களும், கைகளும், உடல் பாகங்களுமாக அந்தப் பகுதியே ரத்தக்களறியாக காணப்பட்டது.
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் பெனாசிர் பூட்டோவை தங்களது வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து பத்திரமாக அவரது வீடு உள்ள பிலவல் ஹவுஸுக்கு அழைத்துச் சென்றனர்.
பெனாசிர் பூட்டோவுக்கு எந்த ஆபத்தமும் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கர குண்டுவெடிப்பில் கட்சித் தொண்டர்கள், கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட 125க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் இறந்தாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெனாசிருக்கு தலிபான், அல்கொய்தா மற்றும் வேறு சில தீவிரவாத அமைப்புகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திக் கொல்லப் போவதாக மிரட்டியிருந்தன. ஆனால் அதை நிராகரித்த பெனாசிர், உண்மையான முஸ்லீமாக இருந்தால் அவர் யாரையும் கொல்ல மாட்டார், குறிப்பாக ஒரு பெண்ணைக் கொல்பவருக்கு நரகத்தில்தான் இடம் கிடைக்கும் என கூறியிருந்தார். திட்டமிட்டபடி வருவேன் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பெனாசிர் பூட்டோ ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தால் பாகிஸ்தானே அதிர்ந்து போயிருக்கிறது.
கராச்சி நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல்கள் துண்டு துண்டாக சிதறியிருப்பதால் பலரது உடலை அடையாளம் காண முடியவில்லை.
முஷாரப் கண்டனம்:
கராச்சி குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பிரதமர் செளகத் அஜீஸ், மாநில ஆளுநர், முதல்வர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதலா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. உயர் மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா கண்டனம்:
கராச்சி சம்பவத்திற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை தேசதிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜோன்ட்ரோ கூறுகையில், இந்த வன்முறைத் தாக்குதலை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது. உயிரிழந்த அப்பாவிகளுக்காக இரங்கல் தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் ஜனநாயகத்தின் மீதான பகிரங்கத் தாக்குதல் இது. இதற்கு யாரும் இடமளிக்கக் கூடாது. தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்திற்கும் எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு உறுதியாக நிற்க வேண்டும் என்றார்.