தீபாவளி: ரூ. 60 கோடிக்கு 'சரக்கு' விற்ற டாஸ்மாக்!
சென்னை: தீபாவளிப் பண்டிகையன்று ரூ. 60 கோடி அளவுக்கு தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில் மது வியாபாரம் நடந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்கு விற்றதே இல்லையாம்.
பண்டிகைக் காலங்கள், விசேஷங்கள் போன்றவற்றின்போது குடித்துக் கொண்டாடுவது என்பது தமிழகத்தில் ஒரு சடங்காகவே மாறிப் போய் விட்டது. மற்ற நாட்களை விட இதுபோன்ற விசேஷ நாட்களின்போதுதான் அதிக அளவில் மது விற்பனையாகும்.
இந்த முறை தீபாவளியன்று ரூ. 60 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதில் பீர் விற்பனைதான் அதிகம். வழக்கமான நாட்களை விட மூன்று மடங்கு அளவுக்கு பீர் வாங்கி ஊற்றியுள்ளனர் குடிமகன்கள். பிராந்தி, விஸ்கி போன்றவை 2 மடங்கு அளவு அதிகம் விற்றுள்ளது.
தமிழகத்தில் 6,700 மதுக் கடைகளை டாஸ்மாக் நடத்தி வருகிறது. இதில் சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த முறை தீபாவளியன்று குடிமகன்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகளை டாஸ்மாக் கடைகள் ஏற்பாடு செய்திருந்தன. தீபாவளியன்று விற்பனை பலமாக இருக்கும் என்பதால், இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும் ஞாயிற்றுக்கிழமையன்றும் மது கொடவுன்கள் திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் மூலம் கடைகளுக்குத் தேவைப்படும் சரக்குகள் பற்றாக்குறை இல்லாமல் உடனுக்குடன் அனுப்ப முடியும் என்பதால் இந்த ஏற்பாடு.
தீபாவளி நாளன்று தமிழகம் முழுவதும் 1.80 லட்சம் கேஸ் மது பானங்கள் விற்பனையாகியுள்ளனவாம். வழக்கமாக ரூ. 25 கோடிக்கு விற்பனையாகும் மது பானங்கள் தீபாவளியன்று மட்டும் ரூ. 60 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை நகரில் ரூ. 4 கோடி அளவுக்கு மது பானங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவும் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகம். இதில் பீர் விற்பனைதான் அதிகம்.
தீபாவளியன்று மாநிலம் முழுவதும் 1.65 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனையாகியுள்ளன. வழக்கமாக 45 ஆயிரம் கேஸ்தான் விற்பனையாகும்.
தீபாவளி விற்பனையில் இதுவரை இந்த அளவுக்கு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்ததில்லையாம்.