நடராஜன் கூட்டத்தில் 'வேட்டு' வைத்த அதிமுக!
கரூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான எம்.நடராஜனின் நிகழ்ச்சியில் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அதிமுக பிரமுகர் கவனித்துக் கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக காவிரி நதிநீர் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க கூட்டம் கரூரில் நாரத கான சபாவில் வழக்கறிஞர் பூ.அர. குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடராஜன் கலந்து கொண்டார்.
இதற்காக வந்த நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் பாலைவனம் ஆவதை தடுக்கத் தான் போராடி வருகிறோம். இந்த தருணத்தில் விவசாய சங்கங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாம் நமது உரிமையை பெற்றுவிடலாம்.
தமிழகத்தின் அடிப்படை நிர் ஆதாரம் அழிந்து விட்டது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, பிரச்சனைகளில் அண்டை மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனம் செய்கிறது. இது தேசிய ஒருமைப்பாட்டிற்கு விரேதமான செயல் ஆகும்.
காவிரி நதி நீர் பிரச்சனை ஏற்பட காரணமே கருணாநிதி தான். எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது 355 டிம்சி தண்ணீரை ஏற்காத கருணாநிதி தற்போது எப்படி 185 டிம்சி தண்ணீரை ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. கருணாநிதி காவிரி பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சிக்கிறார்.
தேர்தல் நேரத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சனையை தீர்ப்போம் என்றார். தேர்தலும் முடிந்து விட்டது. அவர்களும் வெற்றி பெற்று அரியாசனத்தில் அமர்ந்துள்ளனர். ஆனால் காவிரி பிரச்சனை தீர்க்கவில்லையே ஏன். அவர் கொடுத்த உறுதி மொழி என்னவாயிற்று என்று தெரியவில்லை.
காவிரி பிரச்சனை திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்ட பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்த தமிழகத்தின் பிரச்சனை ஆகும். அங்கிருந்து தான் தமிழகத்திற்கு 70 சதவீதம் அரிசி சப்ளை ஆகின்றது. எனவே இது தமிழகம் சார்ந்த பிரச்சனை. எனவே தான் காவிரி நீரை போராடி பெறுவோம்.
முல்லைப் பெரியாறு, பாலார் பிரச்சினைளில் மக்களின் நலன்களைக் காக்கக் கோரி பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ளேன்.
ஆற்காடு மீது பாய்ச்சல்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் செயலற்றப் போக்கும், தவறான நிர்வாகமும்தான் காரணம்.
ஆற்காடு வீராசாமி சரியாக வேலை செய்வதில்லை. முதல்வரின் நிழல் போல பின்னாலேயே போய் வருகிறார் என்றார் நடராஜன்.
பேட்டியின் போது திரைப்பட பாடலாசிரியர் சினேகன் (இவர் அதிமுகவைச் சேர்ந்தவர்) உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நடராஜன் வருகையை முன்னிட்டு மாவட்ட எல்லையிலும், நகரத்தின் முக்கிய இடங்களிலும் அதிர் வேட்டு வைக்கப்பட்டது. இந்த வேட்டு வைக்கும் பணி கரூர் மாவட்ட முன்னாள் எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
இதற்காக உரிய பணத்தை அவர் பெற்றுக்கொண்டதாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கண்ணன், கரூர் மாவட்ட நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் நிருபராகவும் செயல்பட்டு வருகிறர். அதனால் நடராஜனின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவருக்கும் அழைப்பு அனுப்பபட்டது. ஆனால் கட்சியிலிருந்து நீக்கி விடுவார்கள் என்ற பயம் காரணமாக அவர் வரவில்லையாம்.
இதேபோல, நடராஜன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு இரவில் சென்ற கரூர் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நடராஜனை சந்தித்து சால்வை போட்டு காலில் விழுந்து கும்பிட்டனராம்.
ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நடராஜன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் அதிர் வேட்டு வைத்ததும், அதிமுகவைச் சேர்ந்த பாடலாசிரியர் சினேகன் கலந்து கொண்டதும் அதிமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.