2வது மனைவியுடன் தகராறு - மகனை கொன்ற போலீஸ்கா
சென்னை: சென்னை அருகே இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனை கடத்திக் கொன்றார் போலீஸ்காரர்.
சென்னையை அடுத்துள்ள திருநின்றவூரை சேர்ந்தவர் ராமன். காவலராக உள்ளார். இவருக்கு உமா, வசந்தி என இரு மனைவியர். இருவரையும் தனித் தனி வீட்டில் குடி வைத்து குடும்பம் நடத்தி வருகிறார் ராமன்.
கடந்த மாதம் 8ம் தேதி 2வது மனைவி வசந்தியின் வீட்டிற்கு ராமன் சென்றார். அப்போது தீபாவளிகு பலகாரம் வாங்கி வராதது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில் ராமன் தனது மகன் விக்னேஷூக்கு(4) இனிப்பு வாங்கித் தருவதாக கூறி அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை.
வெகுநேரமாகியும், கணவரும், மகனும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த வசந்தி, தனது மகனை கணவர் ராமன் கடத்தி சென்று விட்டதாக கூறி போலீசில் புகார் கொடுத்தார்.
போலீஸாரும் தலைமறைவாகி விட்ட ராமனையும், அவருடன் சென்ற மகனையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். பின்னர் தினசரி திருநின்றவூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
ஆனால் திடீரென்று கடந்த 12ம் தேதி ராமன் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு இன்ஸ்பெக்டர் தொல்லை கொடுப்பதாக நீதிபதியிடம் புகார் கொடுத்தார். ஆனால் நீதிபதி, ராமனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கேளம்பாக்கத்தில் ஒரு சிறுவனின் உடல் கடந்த மாதம் 9ம் தேதி அடையாளம் தெரியாத நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் அந்த சிறுவன், விக்னேஷ் எனத் தெரிய வந்தது. விக்னேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை போலீசார் வசந்தியிடம் காட்டினர். அவர் தனது மகன்தான் என்று அடையாளம் காட்டினார்.
இதையடுத்து உடலை தோண்டி எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். உடல் புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமனிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.