ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினருடன் பொங்கல்-நீதிமன்றம் உத்தரவு!
மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒதுக்கி வைத்த குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் தாலுக்கா குமாரபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், எங்கள் ஊரில் வரும் 16ம் தேதி நடக்கும் மாட்டுப் பொங்கல் விழாவில் எங்கள் ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் சிலர், பிரச்சனை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அமைதியாக விழா நடத்த தக்க பாதுகாப்பு அளிக்கும்படி பொன்னமராவதி இன்ஸ்பெக்டருக்கு மனு அளித்தும், அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அந்த விழாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் கிருஷ்ணன், ஆறுமுகம் குடும்பத்தினரை கடந்த௦௦௦௦௦௦௦௦ 2001ம் ஆண்டு முதல் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
எனவே அந்த கட்டப்பஞ்சாயததார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டவர்கள், ஊர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், சாமி கும்பிடவும் அனுமதியளிக்க வேண்டும் என்று வாதாடினார்.
எதிர்தரப்பினரும் வாதாடினர். இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி பாட்ஷா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுபவர்களையும் சேர்த்துக் கொண்டு ஊரில் பொங்கல் கொண்டாட வேண்டும். அந்த விழாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.