உற்சாகமாய் கொண்டாடப்பட்ட காணும் பொங்கல்!
சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் பெரும் கூட்டம் அலை மோதியது. திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் கடைசி நாளை காணும் பொங்கலாக வட தமிழகத்தில் கொண்டாடுகின்றனர். இந்த வழக்கம் தற்போது திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.
முன்பெல்லாம் சென்னையில்தான் காணும் பொங்கல் களை கட்டும். ஆனால் இப்போது தமிழகம் முழுவதும் பரவலாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இன்று காணும் பொங்கலையொட்டி சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னையில் உள்ள மெரீனா, சாந்தோம், எலியட்ஸ் ஆகிய கடற்கரைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.
நிற்க இடம் இல்லாத அளவுக்கு இந்த கடற்கரைகளில் ஜன சமுத்திரம் காணப்பட்டது. அதேபோல, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பல இடங்களிலும் மக்கள் அலை கடலென திரண்டு வந்து உற்றார், உறவினர், சுற்றத்தாருடன் காணும் பொங்கலை கொண்டாடினர்.
இதுதவிர பொழுது போக்குப் பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா, முட்டுக்காடு படகுத் துறை, பாம்புப் பண்ணை உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அடங்கிய பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
காணும் பொங்கலையொட்டி போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கூடுதல் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டன.
கடலில் குளிக்கத்தடை:
சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் கடற்கரை, அஷ்டலட்சுமி கோயில், கிழக்கு கடற்கரை, விஜிபி தங்க கடற்கரை, நீலாங்கரை, எம்ஜிஎம், முட்டுக்காடு படகுத்துறை, கோவளம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேலும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, மகாபலிபுரம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் இந்த கண்காணிப்பு கோபுரங்களிலிருந்து கூட்டத்தை பைனாகுலர்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தனர்.
கடல் அலையில் சிக்குபவர்களை மீட்பதற்காக மீனவர்கள், தீயணைப்பு படையினரைக் கொண்ட மீட்புப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.
சென்னையிலிருந்து கோவளம், மகாபாலிபுரம் செல்பவர்கள் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டு வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாபலிபுரத்தில்..
இதேபோல மாமல்லபுரத்திலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.
திருச்சி அருகே உள்ள முக்கொம்பில் ஆயிரக்கணக்கான மக்கள் காணும் பொங்கலையொட்டி கூடி பொழுதைக் கழித்தனர். திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவிலிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சிதம்பரம் பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டிலும் படகு சவாரி படு பிசியாக இருந்தது.
ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளிலும், திருச்செந்தூரிலும் கூட காணும் பொங்கல் உற்சாகம் காணப்பட்டது.
கனி காணும் விழா:
குமரி மாவட்டப் பகுதிகளில் கனி காணும் விழாவாக இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டது.
பல்வேறு வகையான பழங்களைப் பார்த்து, கடவுளை வணங்குவது இதன் சாராம்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications