திமுக அடக்குமுறை தர்பார்-அதிமுக புகார்
சென்னை: அரசியலுக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொன்ன திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியை விட்டு திமுகவினர் அறிக்கை விடச் செய்யும் அளவிற்கு திமுகவின் நிலை, தாழ்ந்து போயுள்ளது என அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக எம்.எல்.ஏ.க்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்தே பழக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி, தானாகவே தற்போது சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவு தரும் விஷயங்களில், எந்தளவுக்கு சட்டசபையில் தவறான தகவல்களை கருணாநிதி தந்தார் என எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா சட்ட மேற்கோள்களுடன் சட்டசபையில் எடுத்துக் காட்டினார்.
இது பத்திரிக்கைகளிலும், டிவியிலும் வந்ததால் அச்சம் அடைந்த கருணாநிதி, சபைக் கூட்டத்தொடர் முடிந்த 6 மணி நேரம் கழித்து மக்கள் மத்தியில் எதையாவது சொல்லித் தீர வேண்டும் என்பதற்காக, ஜெயலலிதா மீது துரைமுருகன் மூலம் ஓர் உரிமை மீறல் பிரச்சனையை இரவு 7.30 மணியளவில் தந்து அது உடனடியாக சபாநாயகரால் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர், முதல்வர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மீது 2ம் தேதியன்று 3 உரிமை மீறல் பிரச்சனைகளை சபாநாயகரிடம் கொடுத்தனர்.
இந்த செய்தியை தெரிந்து கொண்ட ஆளும் கட்சியினர் ஊருக்கு புறப்பட இருந்த சபாநாயகரை நிறுத்தி வைத்து நள்ளிரவு கூட்டத்தை முதல்வர் வீட்டில் கூட்டி மேலும் ஒரு தவறை செய்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் தந்த உரிமை மீறல் பிரச்சனைகளை எந்த பத்திரிக்கைகளும் வெளியிடக் கூடாது என நள்ளிரவு நேரத்தில் அவசர அவசரமாக சபாநாயகர் பெயரில் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கருணாநிதி மீதும், துரைமுருகன் மீதும் அதிமுகவினர் எழுப்பியுள்ள உரிமை மீறலை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாதா. இச்செய்தியை பத்திரிக்கைகள் வெளியிடக்கூடாது என எந்த சபை விதி அல்லது மரபுகளில் உள்ளது. அப்படி ஒரு விதி, மரபு இருந்தால் அந்த மரபைச் சுட்டிகாட்டி சபாநாயகர் தனது தரப்பு நியாயத்தைச் சொல்லட்டும்.
சபை உரிமை மீறல் என்பது எதிர்கட்சியினர் மீது மட்டுமே பிரயோகிக்கக் கூடிய ஆயுதமாகவும், அடக்குமுறை நடவடிக்கையாகவும் செயல்படுத்தப்படுகிறது என்பது சபாநாயகரின் செய்திக் குறிப்பிலிருநேத தெரிகிறது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்தால் என்ன தவறு. இதற்காக கருணாநிதி வீட்டில் நள்ளிரவுக் கூட்டம் கூட்டி பத்திரிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் என்ன.
பத்திரிக்கைகளும், டிவிக்களும் கருணாநிதி சொல்வதைத் தான் வெளியிட வேண்டும், மற்றவர்கள் வெளியிடக் கூடாது என நள்ளிரவு கூட்டம் போட்டு உத்தரவு போடப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என கருணாநிதி ஒப்புக்கொள்கிறாரா.
தன்வசம் சட்டசபையும் உரிமைக்குழுவும் இருக்கிறது என்ற நினைப்பில் அதிமுக மீது உரிமை பிரச்சனை என்ற போர்வையில் அடக்குமுறை தர்பார் நடத்துகின்றனர்.
சட்டசபைக்கு தொடர்பே இல்லாத அரசியலுக்கு நாங்கள் வரமாட்டோம் எனச் சொன்ன திராவிடக் கழகத் தலைவர் வீரமணியை விட்டு அறிக்கை விடச் செய்துள்ளனர். அந்த அளவுக்கு திமுகவின் நிலை தாழ்ந்து போயுள்ளது எனக் கூறியுள்ளார் மதுசூதனன்.