மாறன் சகோதரர்கள், கலைஞர் டிவி சி.இ.ஓவுக்கு திடீர் பாதுகாப்பு
சென்னை: சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோருக்கும், கலைஞர் டிவியின் தலைமை செயல் அதிகாரியான சரத் ரெட்டிக்கும் திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
திமுகவுடனான சன் டிவி உறவு முறிந்ததும் பிறந்தது கலைஞர் டிவி. அன்று முதல் இரு டிவிகளுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது. நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் ஒளிபரப்புவது தொடர்பாக இரு டிவிகளும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.
முதலில் சன் டிவியின் பல பிரபலங்களை, கலைஞர்களை, தொழில்நுட்ப கலைஞர்களை கலைஞர் டிவி தன் பக்கம் இழுத்தது.
கலைஞர் டிவியின் நிகழ்ச்சிகளுக்குப் போட்டியாக சன் டிவியும் சகட்டு மேனிக்கு தனது சீரியல்களை பாப்புலராக்கி வருகிறது. மேலும், சன் டிவியின் வரலாற்றிலேயே முதல் முறையாக செய்திகளின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டது. பிற்பகல் செய்தியையே ரத்து செய்து விட்டு புத்தம் புதுப் படங்களை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது சன் டிவி.
இந் நிலையில் சன்டிவி, கலைஞர் டிவியின் பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது.
இரு டிவிகளின் முக்கிய நிர்வாகிகளுக்கும் திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம். புதன்கிழமை முதல் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், அவரது தம்பி தயாநிதி மாறன் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு கோரி மாறன் சகோதரர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாம். இதையடுத்தே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, கலைஞர் டிவி தலைமை செயல் அதிகாரி சரத் ரெட்டிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?:
சமீபத்தில் சன் டிவி தனது டிடிஎச் சேவையை அறிவித்தது. ஆரம்பத்தில் அதற்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் எல்லாம் நடத்தினர். பின்னர் அது அடங்கியது.
இந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் சன் டைரக்ட் டிடிஎச் குறித்த விளம்பரத்தையும், அதுதொடர்பான சலுகைகளையும் சன் டிவி மீண்டும் முடுக்கி விட்டது.
இதேபோல சன் டிவிக்கு ஆரம்பத்திலிருந்தே கடும் போட்டியாக திகழும் ஹாத்வே எம்.எஸ்.ஓ. நிறுவனம் கலைஞர் டிவியின் ஒத்துழைப்புடன் டிடிஎச் சேவையை அறிவித்துள்ளது. இந்த டிடிஎச் சேவை முற்றிலும் இலவசம் என ஹாத்வே அறிவித்துள்ளது.
ஆனால் சன் டிவியின் டிடிஎச்சைப் பெற ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பிரச்சினை எழலாம் என்று எதிர்பார்த்தே சன் மற்றும் கலைஞர் டிவி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், கலைஞர் டிவி தலைமை செயல் அதிகாரி சரத் ரெட்டி ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தப் பாதுகாப்பு குறித்து செவ்வாய்க்கிழமை மூத்த காவல்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.