சென்னை வரும் 'குயீன் விக்டோரியா'
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கப்பல் சுற்றுலா நிறுவனமான கனார்ட் லைன் நிறுவனத்தின் தயாரிப்புதான் குயீன் விக்டோரியா. இந்த நிறுவனம் மிகப் பழமையானது. கிட்டத்தட்ட 168 ஆண்டுகளாக கப்பல் சுற்றுலாவில் ஈடுபட்டு வருகிறது. கப்பல் என்றால் உங்க வீட்டு கப்பல், எங்க வீட்டு கப்பல் இல்லை. பிரமாண்ட கப்பல்களை மட்டுமே இந்த நிறுவனம் சுற்றுலாவில் ஈடுபடுத்துவது வழக்கம்.
இந்த நிறுவனம் இதற்கு முன்பு குயீன் எலிசபெத் 2, க்வீன் மேரி 2 ஆகிய இரு பிரமாண்டக் கப்பல்களை சுற்றுலாவில் ஈடுபடுத்தியுள்ளது. இப்போது க்வீன் விக்டோரியாவை உருவாக்கியுள்ளது. குயீன் விக்டோரியா என இக்கப்பலுக்குப் பெயரிட்டவர்கள் இளவரசர் சார்லஸும், அவரது மனைவி கமீலா பார்க்கர் பெளல்ஸும்தான்.
உலகிலேயே மிகப் பிரமாண்டமான 2வது கப்பல் என்ற பெயர் விக்டோரியாவுக்குக் கிடைத்துள்ளது.
இந்தக் கப்பல் 300 மீட்டர் நீளமும், 33 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்த எடை 90 ஆயிரம் டன். அத்தனை வசதிகளும் இந்தக் கப்பலில் அடக்கம்.
7 மாடிகளைக் கொண்ட இக்கப்பலின் உயரம் 55 மீட்டர் ஆகும். மொத்தம் 990 அறைகள் உள்ளன. 2 ஆயிரம் பேர் கப்பலில் வசதியாக தங்க முடியும்.
ஓய்வு அறைகள் தவிர 10 பார்கள், 6 ஹோட்டல்கள், 2 மெகா சைஸ் விளையாட்டு மைதானங்கள், ஆனந்தமாக நீச்சலடிக்க 4 நீச்சல் குளங்கள், 3 ஜிம்கள், 2 தியேட்டர்கள், 25 இன்டர்நெட் பார்லர்கள் உள்ளன.
பல்வேறு வசதிகளுடன் கூடிய 15 வகையான தங்கும் அறைகளும் உள்ளன. பெரிய அளவிலான நூலகமும் இங்கு உள்ளது. நூலகம் மட்டும் 2 அடுக்குகளைக் கொண்டது.
இந்த பிரமாண்ட சொகுசுக் கப்பல் வருகிற 23ம் தேதி சென்னைக்கு வருகிறது. 2 நாட்கள் சென்னையில் இருக்கும் கப்பல் பின்னர் கொச்சிக்குப் புறப்பட்டுச் ெசல்லும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி விக்டோரியாவின் உலகம் சுற்றும் பயணம் தொடங்கியது.
கனார்ட் லைன் நிறுவனம் அடுத்து 2010ம் ஆண்டு க்வீன் எலிசபெத் என்ற இன்னொரு பிரமாண்ட சொகுசுக் கப்பலை கடலில் இறக்கத் தீர்மானித்து அதுதொடர்பான பணிகளில் பிசியாக இறங்கியுள்ளது.













Click it and Unblock the Notifications