வாஜ்பாயை அரசமைக்க விடாமல் கே.ஆர்.நாராயணன் சதி செய்தார்-அத்வானி
அத்வானி எழுதியுள்ள மை கன்ட்ரி, மை லைப் என்கிற புத்தகத்தில் இவ்வாறு கூறியுள்ளார் அத்வானி. பல்வேறு பரபரப்பான அம்சங்களை உள்ளடக்கிய அந்த நூலில், பாஜக அரசு அமையக் கூடாது என்று கே.ஆர். நாராயணன் மிகுந்த பிரயாசைப் பட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது நூலில் அத்வானி கூறியுள்ளவற்றிலிருந்து சில பகுதிகள்,
கடந்த 1993 ம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ.க தனி பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. ஆனால், வாஜ்பாயை பிரதமராக பதவியேற்று, ஆட்சி அமைக்க அழைக்காமல் கே.ஆர்.நாராயணன் தாமதம் செய்தார்.
சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கு பின், கூட்டணி அல்லது தனிப் பெரும் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்; பதவியேற்ற பின், சபையில் நம்பிக்கை பெற அவகாசம் அளிக்க வேண்டும் என்று தான் அரசியல் சட்டம் சொல்கிறது.
இதைத்தான், கர்நாடக முதல்வர் பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் கூறியிருந்தது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றி பரிந்துரைத்த அறிக்கையில், சர்க்காரியா கமிஷனும் இதையே கூறியிருந்தது.
இவற்றின் அடிப்படையில் தான், முன்பு குடியரசுத் தலைவர்களாக இருந்த ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா போன்றோர் நடந்து கொண்டனர். ஆனால், கே.ஆர்.நாராயணன், அவர்கள் கடைபிடித்த விதிகளை மாற்றினார். தனக்கென புதிய விதிகளை உருவாக்கி, அதன்படி பாரபட்சமாக நடந்து கொண்டார்.
1998ம் ஆண்டு தேர்தலுக்கு பின், வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைக்க பத்து நாள் தாமதம் செய்தார். அப்போது நடந்த தேர்தலில், எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தனி பெரும் கட்சியாக பா.ஜ.க இருந்தது. ஆனால், பா.ஜ.க. வை ஆட்சி அமைக்க அழைக்க தாமதப்படுத்தி, காங்கிரஸ் கட்சிக்கு உதவினார் நாராயணன்.
பா.ஜ.க ஆட்சி வரவிடாமல் தடுக்க, சில கட்சிகளுடன் காங்கிரஸ் பேரம் பேசியதற்கு நாராயணன் கொடுத்த அவகாசம் தான் காரணம். அப்படி தாமதம் செய்தும், கடைசியில் வாஜ்பாயை தான் அழைக்க வேண்டியதாகி விட்டது.
ஆனால், ஓராண்டுக்கு பின், வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. சோனியா செய்த அரசியல் சதி தான், அந்த அரசு கவிழ காரணமாக இருந்தது.
'ஜின்னாவால் ஏற்பட்ட வேதனை':
2005ம் ஆண்டு நான் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டபோது, முகம்மது அலி ஜின்னா குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது கண்டு வேதனையுற்றேன்.
அது சாதாரண சர்ச்சைதான். ஆனால் எனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வலியை அது ஏற்படுத்தி விட்டது. 1996ம் ஆண்டு ஹவாலா மோசடி வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டதை விட இது மிகப் பெரிய வேதனையைக் கொடுத்தது.
ஆனால் ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது போல ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை.
நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அமைதியன் தூதுவராகத்தான் நான் பாகிஸ்தான் சென்றேன். இரு நாட்டு உறவையும் சுமூகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் நான் பாகிஸ்தான் சென்றேன். எனது நோக்கம் ஓரளவு நிறைவேறியது என்றே இப்போதும் நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் அத்வானி.