7 புதிய அமைச்சர்கள்-மணி சங்கருக்கு இறங்குமுகம்!
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில், நேற்று புதிதாக 7 அமைச்சர்கள் பதவியேற்றனர். 9 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டன.
பிரமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நேற்று சிறிய அளவிலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவை மாற்றத்திற்கு வசதியாக தாசரி நாராயணராவ்,சுரேஷ் பச்சோரி, சுப்பராமி ரெட்டி உள்ளிட்ட 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து நேற்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் அரங்கில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. மொத்தம் 7 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் (பஞ்சாப்), புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. நாராயணசாமி, ரகுநாத் ஜா (பீகார்), சந்தோஷ் பக்ரோடியா (ராஜஸ்தான்), ரமேஷ்வர் ஓரான் (ஜார்க்கண்ட்), ஜோதிர் ஆதித்யா சிந்தியா (ம.பி), ஜிதீன் பிரசாதா (உ.பி.) ஆகியோர் புதிததாக அமைச்சர்களாகப் பதவியேற்றவர்கள்.
அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது. இவர்களில் கேபினட் அமைச்சர்கள் எண்ணிக்கை 32 ஆகும். இணை அமைச்சர்கள் 39 பேர், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 8 பேர் ஆவர்.
புதிய அமைச்சர்களின் இலாகா விவரம்:
எம்.எஸ்.கில் - விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் (தனிப் பொறுப்பு).
சந்தோஷ் பக்ரோடியா - இணை அமைச்சர், நிலக்கரித் துறை.
ரகுநாத் ஜா - இணை அமைச்சர், கனரகத் தொழில்கள், பொது நிறுவனங்கள்.
ராமேஷ்வர் ஓரான் - இணை அமைச்சர், பழங்குடியினர் நலம்.
வி.நாராயணசாமி - இணை அமைச்சர், நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் திட்டமிடல்.
ஜோதிர் ஆதித்யா சிந்தியா - இணை அமைச்சர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை.
ஜிதீன் பிரசாதா - இணை அமைச்சர், இரும்புத் துறை.
நேற்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களில் யாருக்கும் கேபினட் அந்தஸ்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மணிசங்கர் அய்யர் - பஞ்சாயத்து மட்டும்!
இதுதவிர சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.
மணிசங்கர் அய்யரிடமிருந்து இளைஞர் நலம், விளையாட்டு ஆகிய துறைகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. அவர் தற்போது பஞ்சாயத்து ராஜ், வட கிழக்கு மாநிலங்கள் விவகாரத் துறையை மட்டும் வைத்திருப்பார்.
நாடாளுமன்ற விவகாரத் துறை, பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியிடமிருந்து பிரித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது. முன்ஷி, தகவல் மற்றும் ஒலிபரப்பு இலாகாவை மட்டும் வைத்திருப்பார்.
அதேபோல ஹண்டிக்கிடமிருந்த நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் பொறுப்பு நாராயணசாமிக்கு தரப்பட்டுள்ளது.
இணை அமைச்சர் ஷகீல் அகமது இதுவரை பார்த்து வந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை ஜோதிர் ஆதித்யாவுக்கு தரப்பட்டுள்ளது. ஷகீல் அகமது உள்துறை இணை அமைச்சராக இருப்பார்.
இணை அமைச்சர் காந்தி சிங்கிடம் இருந்த கனரக தொழில், பொது துறை நிறுவனங்கள் துறை பறிக்கப்பட்டு ரகுநாத் ஜாவிடம் தரப்பட்டுள்ளது. காந்தி சிங் கலாச்சாரத் துறையைக் கவனிப்பார்.
ஜெய்ராம் ரமேஷ் வர்த்தகத்துடன் மின்சாரத்துறையையும் சேர்த்து கவனிப்பார். அதற்குப் பதிலாக அவரிடமிருந்து தொழில் துறை பிரிக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை இணை அமைச்சராக இருந்து வந்த பி.கே.பன்சால், கூடுதலாக நாடாளுமன்ற விவகாரத் துறையையும் கவனிப்பார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி நேற்றைய அமைச்சரவை மாற்றப் பட்டியலில் இடம் பெறவில்லை.