அரசு மருத்துவமனை லிப்ட்டில் சிக்கிய 10 பேர் மீட்பு
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனை லிப்ட்டுக்குள் 3 பெண்கள் உள்பட 10 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரு பகுதிகளாக 7 மாடிகளைக் கொண்ட கட்டடம் உள்ளது.
இதில் முதல் டவரில் உள்ள லிப்ட்டை நோயாளிகளும், நோயாளிகளைக் காண வருவோரும் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று மாலை 6 மணியளவில் 7வது மாடியிலிருந்து லிப்ட் பத்து பேருடன் கீழே வந்து கொண்டிருந்தது. அப்போது முதல் தளத்திற்கும், தரைத் தளத்திற்கும் இடையே வந்த போது திடீரென லிப்ட் நின்று விட்டது.
லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டதால் அது நின்றது. இதனால் லிப்ட்டுக்குள் இருந்த 10 பேரும் பீதியடைந்து அலறினர். அவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். அவர்களில் அரசு செய்தித் தொடர்பாளர் ஜெயஸ்ரீயும் ஒருவர்.
இந்த நிலையில் லிப்ட் நின்ற தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். இந்த நிலையில் லிப்ட்டுக்குள் இருந்த சிவகாமி என்ற பெண் வியர்த்துப் போய் மயக்கமடைந்து விட்டார். மேலும் 2 பெண்களும் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு ஜெயஸ்ரீ தன்னிடமிருந்து தண்ணீரைக் கொடுத்து மயக்கம் தெளிவித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், இரவு 8 மணி வாக்கில் தீயணைப்புப் படையினர் மிகுந்த சிரமப்பட்டு லிப்ட்டை தரைத் தளத்திற்குக் கொண்டு வந்தனர். பத்து பேரும் வியர்த்துப் போய் தொப்பலாக வெளியே வந்தனர்.
அனைவருக்கும் உடனயாக குளிர்ந்த நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். அதன் பிறகு பத்து பேரும் வெளியேறினர்.
அதிக அளவில் பாரம் இருந்ததால்தான் லிப்ட் நின்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications